சமஸ்

அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!

www.arunchol.com


என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!

 ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தேன். அந்த முயற்சி இப்போது கை கூடியிருக்கிறது. ‘அருஞ்சொல்.காம்’ - www.arunchol.com தளம்தான் அது!

இனி அன்றாடம் என்னுடைய எழுத்துகளை இங்கே வாசிக்கலாம். கூடவே தமிழின் முக்கியமான ஆளுமைகளின் கருத்துகள், படைப்புகளையும் வாசிக்கலாம். அன்றாடம் ஒரு ‘தலையங்கம்’, ஒரு ‘சிறப்புக் கட்டுரை’ அல்லது ‘சிறப்புப் பேட்டி’, தளத்தில் வெளியாகும் படைப்புகளை முன்வைத்து வெளியாகும் வாசகர்கள் - ஆளுமைகளின் விமர்சனங்களைத் தாங்கி வரும் ‘இன்னொரு குரல்’… இப்படி மூன்று பதிவுகள் மட்டுமே வெளியாகும்.

தமிழில் நேரடிக் கட்டுரை ஒருநாள் என்றால், மொழிபெயர்ப்புக் கட்டுரை மறுநாள் என்கிற அளவுக்கு மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரவிருக்கிறோம். இந்தியாவின் முக்கியமான அறிவாளுமைகள், சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்களிக்கவிருக்கிறார்கள்.  

மூன்று பதிவுகளுக்கு மேல் வெளியிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். நுகர்வோர் இல்லை வாசகர்கள்; அவர்கள் மீது குப்பைகள்போல பதிவுகளைத் திணிக்கக் கூடாது என்ற எண்ணமே அடிப்படை. “அன்றாடம் அரை மணி நேரம் எங்கள் தளத்தில் செலவிடுங்கள்; உங்களுடைய மதிப்புமிக்க அறிவை மேலும் செறிவூட்டிக்கொள்ள உதவுகிறோம் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம்” என்பதே ‘அருஞ்சொல்’ முன்வைக்கும் வேண்டுகோள்.

என் மதிப்புமிக்க வாசகர்கள் உங்கள் ஒருவரையும் அருஞ்சொல் தளத்துக்கு வரவேற்கிறேன். இனி அங்கு நாம் உரையாடுவோம்!

விடைபெறுகிறேன்: நன்றி தி இந்து!

எனது அன்புக்குரிய நண்பர்கள், வாசகர்களுக்கு, வணக்கம்!

இந்த வாரத்தோடு ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெற்றுக்கொண்டேன். 2013 ஜூன் மாதத்தில் ‘தி இந்து’ குழுமத்தில் தொடங்கிய என்னுடைய பணி, 2021 ஜூன் மாதத்தோடு நிறைவுக்கு வந்திருக்கிறது. நெகிழ்வான மனதுடனேயே வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறேன். 

உலக எழுத்தாளர் கி.ரா.


தமிழ்நாட்டில், அகிலனுக்கு 1975-ல் அளிக்கப்பட்ட பிறகு ‘ஞானபீடம்’ விருதுக்காக கால் நூற்றாண்டு இருவரது பெயர்கள் அவ்வப்போது பேசப்பட்டுவந்தன. ஜெயகாந்தன், அசோகமித்திரன். ஒருசமயம், சுந்தர ராமசாமி எழுதினார், “ஒவ்வொரு வருடமும் ஜெயகாந்தன் பெயரையோ, அசோகமித்திரன் பெயரையோ மாற்றி மாற்றிப் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை, நான் பரிந்துரைப்பதை நிறுத்திக்கொண்டால் கொடுப்பார்களோ என்னவோ!”

ஜெயகாந்தனுக்கு 2002-ல் ‘ஞானபீடம்’ கொடுக்கப்பட்ட பிறகு, அசோகமித்திரன் முன்னிறுத்தப்பட்டார்; அடுத்த இடத்தில் கி.ரா. மெல்லப் பேசப்படலானார். ஊடாகவே இந்திரா பார்த்தசாரதி முதல் வைரமுத்து வரை வெவ்வேறு பெயர்களும் அடிபட்டுவந்தன என்றாலும், 2017-ல் அசோகமித்திரனும் மறைந்த பிறகுதான் கி.ரா.வின் பெயர் பெரிதும் பேசப்படலானது. கி.ரா.வுக்கு இதில் வருத்தம் உண்டு. ஜெயகாந்தன், அசோகமித்திரன் தொடங்கி ‘ஞானபீடம்’ விருதுக்காக முன்னிறுத்தப்பட்ட பலர் மீதும் அவருக்கு நன்மதிப்பு இருந்தது; அதேசமயம், தான் எந்த விதத்தில் குறைந்துபோனோம், இத்தனை ஆண்டுகள் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டோம் என்ற கேள்வி அவருக்கு இருந்தது. ஜெயகாந்தனைவிட அசோகமித்திரன் 3 வயது மூத்தவர்; கி.ரா. 11 வயது மூத்தவர் என்பதையும், ஒருவேளை 80 வயதை ஒட்டி மறைந்திருந்தால், பத்ம விருதுகளைப் போல ஞானபீட விருதுக்கும் பேசப்படும் இடத்தில்கூடத் தன் பெயர் இருந்திருக்காது என்ற கி.ரா.வின் கவலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவருடைய துயரத்தின் வலி புரியும்.

இந்த விருதுக்கான பேச்சு ஒரு பெரிய விஷயம் இல்லை. அது இங்கே இருந்த ஒரு முன்வரிசையைச் சுட்டுவதாகும். வயது அல்லது பங்களிப்பு அடிப்படையிலானது அல்ல இந்த முன்வரிசை; அது ஒரு ‘பொது அடையாளம்’ சார்ந்தும் உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைய பாரதி, புதுமைப்பித்தனில் தொடங்கி இன்றைய ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை இந்தப் பொது அடையாளப் பட்டியலில் வந்துவிடுவார்கள். கி.ரா. இந்த வட்டத்துக்குள் வர மாட்டார்; இமையம், ஜோ டி குரூஸ் வர மாட்டார்கள். பெருமாளுக்கும் அய்யனாருக்கும் இடையே உள்ள வேறுபாடு மாதிரிதான்; சாமியின் மகிமை மீது யாருக்கும் சந்தேகம் கிடையாது; மரியாதைக்கும் குறைச்சல் இல்லை; ஆனால், அந்தஸ்தில் அது பொது சாமி; இது நாட்டுப்புறச் சாமி.

வாழ்நாள் முழுவதும் இந்தப் பாகுபாட்டை அனுபவித்தார் கி.ரா. அவர் எழுதிய கிராமத்தையும் வாழ்வையும் ஒரு வட்டாரத்தின், ஒரு சமூகத்தின் குரலாகக் குறுக்கும் அரசியல் இங்கே தொடர்ந்து நடந்தது. ஒரு உரையாடலில் கி.ரா. கேட்டார், “சரி, என்னோட கதைகள் ஒரு வட்டாரத்தோட, ஒரு சாதியோட கதைகள்னா மத்தவங்களோடதெல்லாம் என்ன?” அடுத்து கி.ரா. கேட்க வரும் கேள்வி புரிந்துகொள்ள முடியாததா என்ன? ‘ஜெயகாந்தனோ, அசோகமித்திரனோ தன் படைப்புகளில் வெளிக்கொணர்ந்த வாழ்க்கையை மட்டும் எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான அல்லது உலகளாவிய மானுடப் பரப்புக்கானதாகச் சொல்லிட முடியும்?’

சரியான முடிவா முழு ஊரடங்கு?


பலதரப்பு மனிதர்கள் கருத்துச் சொல்லும் காணொளி ஒன்றைப் பார்த்தேன். திமுக ஆட்சி அமைந்த ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டது அது. எதிர்பார்த்ததைவிடவும் மேலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அதில் பலரும் சொல்கிறார்கள். ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அரசியலர்கள் வட்டாரத்திலேயே கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு அப்படி ஒரு பேச்சு இருப்பதைக் கேட்கிறேன். வெகுமக்கள் மனம் கவரும் அறிவிப்புகள் மட்டுமே இதற்குக் காரணம் என்று நான் நம்பவில்லை. முன்னதாக தமிழக மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு ஆட்சி இங்கே  இருந்தது; அரசியல் தலைமை என்பதே காணாமல்போயிருந்தது; நான் முன்பே பல முறை சுட்டியிருக்கிறபடி கே.பழனிசாமி ஆட்சியின் ஆகப் பெரிய வீழ்ச்சி அதுதான்.

நல்லதோ, கெட்டதோ; பெரும்பான்மை முடிவுகளை மாநிலத்தில் அரசு அதிகாரிகளே எடுத்தனர். நாடு தழுவிய பிரச்சினைகளில் பாஜகவின் முடிவுகளுக்கேற்ப பழனிசாமியின் அரசு ஒத்திசைந்து செயல்பட்டது. கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இது மேலும் வெளிப்பட்டது. உலகெங்கும் கரோனா பரவியது. தொற்றுக்குள்ளானோரின் வீடுகள் தகரத் தட்டிகளால் அடைத்துத் தடுக்கப்பட்டதையும், வீதிகள் இரும்புக் கம்பிகளால் மறிக்கப்பட்டதையும் இங்கேதான் கண்டோம். ஊரடங்கின்போது தவறி வெளியே சென்றவர்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இவ்வளவையும் பொருட்படுத்தாதவராக பழனிசாமி இருந்தார். தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்து, மக்கள் செத்துக்கொண்டிருந்த சமயத்திலேயே “நானும் உங்களைப் போல டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று சொன்ன வரலாறு அவருக்கு இருந்ததால் மக்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்கள்.

மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நடந்த முதல் நல்ல விஷயம், வெகுமக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு செவிசாய்க்கும் என்ற சமிக்ஞை வெளியானது; அதுதான் மக்களின் வரவேற்புக்கு முக்கியமான காரணம். ஊரடங்கின் கேடுகளை எதிர்க்கட்சித் தலைவராக நன்கு உணர்ந்திருந்தவர் என்பதால், மிகுந்த தயக்கத்துடனேயே ஊரடங்கு அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். நாட்டிலேயே அதிகமான பரவல் எனும் இடத்தை நோக்கி தொற்று பரவிவந்தது; மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன; ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அலைக்கழிந்தனர்; மருத்துவர்கள் பெரும் பணி நெருக்கடிக்கு ஆளாயினர்; அனைத்துக் கட்சிகளிடத்திலிருந்தும் ஊரடங்குக்கான அழுத்தம் பெருகிவந்தது; ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இவ்வளவு நெருக்கடியானச் சூழல்கள் ஸ்டாலினுக்கு முந்தையவர்கள் எவரும் எதிர்கொண்டிராதது; ஆக, ஊரடங்கு முடிவு நோக்கி அவர் நகர்ந்த நியாயம் புரிந்துகொள்ளக்கூடியது.

சரி, இந்த ஊரடங்கை எப்படி அமலாக்குவது? இதில்தான் நமக்குப் பெரிய தெளிவு தேவைப்படுகிறது. உலக நாடுகள் பெரும்பான்மையும் ஊரடங்கை அமல்படுத்தினாலும், மோசமான முன்னுதாரணம் பிரதமர் மோடி 2020 மார்ச் 24-ல் அறிவித்தது என்பதை வரலாறு சொல்லும். போதிய அவகாசம் கொடுக்காமல், மக்களை அல்லோலகல்லோலப்படுத்தி அலைக்கழித்து வதைத்த ஊரடங்கு அது. ஊரடங்கு எப்படி அமலாக்கப்படக் கூடாது என்பதை அதிலிருந்தும், எப்படி அமலாக்கப்பட வேண்டும் என்பதை உலகளாவிய அனுபவங்களிலிருந்தும் இந்த ஓராண்டில் இந்திய மாநிலங்கள் கற்றிருக்கின்றன.

பிரிட்டனில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலேயேகூட அத்தியாவசியப் பொருள்களுக்கான அங்காடிகள், கடைகள் முழுமையாக மூடப்படவில்லை. லண்டன் மெட்ரோ உட்பட பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயங்கியது. ஆயினும், அங்கேயே பொதுமுடக்கத்தைக் கையாண்ட விதம் தொடர்பில் தீவிரமான விவாதங்கள் இன்று நடக்கின்றன. இந்த விவகாரத்தைத் தொடக்கத்திலிருந்தே மாறுபட்ட கவனத்துடன் ஸ்வீடன் அணுகிவருகிறது. சாத்தியப்பட்ட அனைவரும் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவதை அது உத்வேகப்படுத்தியது; திரளான கூடுகைகளுக்கு அது தடை விதித்திருந்தது; மக்கள் விழிப்புணர்வுடன் அணுகத் தொடர்ந்து அது வலியுறுத்திவந்தது; அதேசமயம், அன்றாடச் செயல்பாடுகளை ஸ்வீடன் முடக்கவில்லை. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை விகிதம் பிரிட்டனைக் காட்டிலும் ஸ்வீடனில் அதிகமாக இருந்தபோதிலும், தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதம் ஸ்வீடனில் குறைவாகவே இருந்தது. மேலும், பொருளாதாரத்தில் ஸ்வீடன் 3% வீழ்ச்சியை எதிர்கொள்ள பிரிட்டன் 10% வீழ்ச்சியை எதிர்கொண்டது. தீவிரமாக ஊரடங்கை அமலாக்குவது மொத்தமாக மக்களுடைய வாழ்க்கைத்தரத்திலும், மரணங்களிலும், நெடுங்காலத்துக்குப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் விளைவுகளோடு ஒப்பிடப்பட்டு இன்று அங்கு விவாதங்கள் நடக்கின்றன.

திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?


புது டெல்லியின் கருத்துருவாக்கர்கள் 2021 ஐந்து மாநிலத் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள்? தேர்தல் ஆய்வாளரும், சமூகவியலாளருமான யோகேந்திர யாதவ் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார், ‘பாஜகவின் அஸ்வமேத யாகத்தை நிறுத்தி இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது வங்கம்!’ முதல்வர் மம்தா இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமே இல்லை. கட்டுரையில் ஓரிரு வரிகளில் தமிழ்நாட்டைக் கடந்திருக்கிறார் யோகேந்திர யாதவ்.

பத்திரிகையாளர் சேகர் குப்தா ட்விட்டரில் தன்னுடைய இணையப் பத்திரிகையின் இரு தலையங்கங்களைப் பகிர்ந்திருந்தார். வங்கத்தைப் பற்றிய தலையங்கம் சொல்கிறது, ‘வங்கத் தேர்தலில் மூன்று முக்கியமான விஷயங்களைக் காண முடிகிறது. முதலாவது, மோடி யுகத்தில் பாஜக அடைந்த பெரிய தேர்தல் தோல்வி இது. பிரிவினை, வகுப்பியச் செயல்திட்டங்கள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை வெல்ல பாஜகவுக்கு உதவாது. மூன்றாவது, எல்லாம் வல்ல நரேந்திர மோடி என்ற ஆளுமை வழிபாடு இந்தி மாநிலங்கள், குஜராத் போன்றவற்றில் எடுபடலாம். அது ஏனைய பகுதிகளை ஈர்க்காது.’ அதேசமயம், சேகர் குப்தாவின் தமிழ்நாட்டைப் பற்றிய தலையங்கம் இப்படிச் சொல்கிறது, ‘தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றி ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் சுரத்தே இல்லாத, சீரற்ற ஆட்சிக்குப் பிறகு ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவுக்குத் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி சாத்தியமற்றதாகவே இருந்தது!’ அதே ஊடகத்தின் இன்னொரு ஆசிரியர் ராம லக்ஷ்மி – ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் முன்னாள் செய்தியாளரும்கூட - இவர் ட்விட்டரில் இப்படி ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்திருந்தார்: ‘தமிழ்நாட்டின் பப்புவை வாக்கு இயந்திரமாக பிரஷாந்த் கிஷோர் எப்படி மாற்றினர் என்பதை வாசியுங்கள்... முரட்டுத்தனமான மாணவர் தலைவர் என்பதிலிருந்து முதல்வராகும் சாத்தியமுள்ளவராக - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இயல்பான உருமாற்றம்.’

இது வாடிக்கைதான். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக் கட்சிகள் ஆட்சியின் ஐம்பதாண்டு, அதன் தளகர்த்தர்களில் ஒருவரான கருணாநிதியினுடைய சட்டமன்றப் பணியின் அறுபதாண்டு முத்தருணங்களை ஒட்டி ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலை உருவாக்குகையில் கட்டுரைக்காக அணுகியபோது, நவீன இந்தியாவின் வரலாற்றாய்வாளர் என்று தன்னை வரையறுத்துக்கொள்ளும் ராமசந்திர குஹா மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘எனக்குத் தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாது!’ அது சரி, பேசவோ எழுதவோ விருப்பமற்ற ஒன்றை ஒருவர் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்!

என்னைப் பொறுத்த அளவில், வங்கத்தில் மம்தாவின் வெற்றிக்கு இணையானதாகவே தமிழ்நாட்டில் ஸ்டாலினின் வெற்றியையும் காண்கிறேன்.

தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா?




பனிமேகப் பழுப்பு மலைக் குன்றுகளும், பசும்புல்வெளிகளும் நிரம்பியதான சிக்கிம் ஞாபகம் வரும்போதெல்லாம், ‘இந்த நாட்டில் சிக்கிமர் ஒருவர் பிரதமராகும் நிலை என்றாவது வருமா?’ என்று பிரதீப் பாஞ்சுசோபாம் கேட்ட கேள்வியும் நினைவுக்கு வரும். ‘சிறிய மாநிலங்களே சிறந்தது’ என்று சொல்லி மாநிலங்களை உடைக்க வாதிடுபவர்களிடம் எல்லாம் அவசியம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும் தோன்றும்.

இந்தியாவின் சிறிய மாநிலம் சிக்கிம். 7,096 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட சிக்கிமின் மொத்த மக்கள்தொகை வெறும் 6.10 லட்சம். தமிழ்நாட்டோடு ஒப்பிட 18-ல் ஒரு பங்கு நிலப்பரப்பையும், 139-ல் ஒரு பங்கு மக்கள்தொகையையும் கொண்டது.

சிறிய மாநிலங்களே வளர்ச்சிக்கு உகந்தது என்று சொல்லி தமிழ்நாட்டின் பிரிவினைக்குப் பொது அறிவுஜீவியான ஞாநி போன்றவர்களே வாதிட்டிருக்கும்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் தொடர்ந்து இதைப் பேசுவதில் ஆச்சரியம் இல்லை. 

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கு முன்னத்தி ஏரான ஆந்திர பிரதேசம் பிளவுண்டதில் சாதிக் கணக்குகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தெலுங்கர்கள் ஒரே மொழியினராய்ச் சிந்தித்தபோது இந்தியாவில் இந்திக்கு அடுத்து அதிகமாகப் பேசப்படும் மொழியின் தாய்நிலமாக சக்திமிக்க ஆந்திர பிரதேசம் பிறந்தது. அதே தெலுங்கர்கள் ரெட்டிகளாகவும் கம்மாக்களாகவும் காப்புக்களாகவும் மீண்டும் பிளவுண்டபோது ஆந்திரம், தெலங்கானா இரண்டு மாநிலங்கள் உருவானதோடு, அடுத்து ‘ராயலசீமா’வுக்கான மூன்றாவது கங்கும் கனன்றுகொண்டிருக்கிறது. 

முன்னதாக வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு என்று பேசிவந்த ராமதாஸ் அடுத்து கொங்குநாடு என்ற பிளவையும் சேர்ப்பதும், சமூகவலைதளங்களில் இந்த விவாதம் தீயெனப் பரவுவதும் தமிழர்களை மறைமுகமாகச் சாதிரீதியாகப் பிளப்பதே ஆகும். நேரடியாக வன்னியர் நாடு, கவுண்டர் நாடு, தேவர் நாடு, நாடார் நாடு என்றும் அடுத்தடுத்து இதைப் பேசலாம்.

இது தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்பதற்கான போர்: ஸ்டாலின் பேட்டி


சித்திரை உச்சிவெயில். உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தாலும் அசராமல் காத்திருக்கிறது கூட்டம். அலரும் ஒலிபெருக்கியின் முழக்கங்களுக்கும், தொண்டர்களின் ஆரவாரத்துக்கும் இடையில் கிழித்துக்கொண்டு நுழையும் பிரச்சார வேனிலிருந்து வெளிப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மூன்றாண்டுகளுக்கு முன்புபோல பலராலும் சாதாரணமாக மதிப்பிடப்பட்டவராக இல்லை; 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உட்பட எதிரில் உள்ள அத்தனை நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பிரதான இலக்கும் அவரே. ஆளுங்கட்சியின் தலைவரை அல்லது முதல்வரைப் பிரதான இலக்காக்கி நடக்கும் பிரச்சாரங்களிலிருந்து இந்தத் தேர்தல் முழுவதுமாக மாறுபட்டிருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவரையே எல்லோரும் குறிவைக்கிறார்கள். ஜாம்பவான் கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுகவில் அதிகார மாற்றத்தைச் சுமுகமாகக் கைமாற்றிக்கொண்டதோடு, ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஸ்டாலின் கூட்டணியையும் ஜாக்கிரதையாகக் கையாள்கிறார்.

தன்னுடைய தவறுகள், போதாமைகளை ஸ்டாலின் தீர்வுகள் வழி எதிர்கொள்கிறார். தான் கருணாநிதிபோல வசீகரமான பேச்சாளர் அல்ல என்பதை உணர்ந்திருப்பவர் திமுகவின் கூட்டங்களை மக்களுடன் உரையாடும் களமாக மாற்றியிருக்கிறார். எல்லோருக்கும் பொறுமையாகக் காது கொடுப்பதும், குறைகளுக்கு முகம் கொடுப்பதும், சரியானவர்களிடம் பொருத்தமான பொறுப்புகளை ஒப்படைப்பதும் ஸ்டாலினின் பெரிய பலம் என்கிறார்கள் கட்சியினர். சரியான தருணத்தில் கட்சியைத் தகவல் தொழில்நுட்ப யுகத்துக்கும் நகர்த்தியவர் மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்ப கட்சிக்குப் புது உருவம் கொடுத்திருக்கிறார். 2014 மக்களவைத் தேர்தலில் அத்தனை இடங்களிலும் தோற்ற கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வென்றது பெரிய திருப்பம். 2021 சட்டமன்றத் தேர்தல் ஸ்டாலினுடைய வாழ்வில் முக்கியமான தேர்தல். கடுமையாக உழைக்கிறார். 20 நாட்களில் அவருடைய பிரச்சார வாகனம் 12,000 கி.மீ. பயணித்து 234 தொகுதிகளையும் சுற்றிவந்திருக்கிறது. தங்கும் ஊர்களில் வீதிகளில் மக்களுடன் நடப்பவர் தொடர் பயணங்களுக்கு இடையே பேசினார்.

இந்த நாட்களில் உங்களுடைய ஒரு நாள் எப்படியிருக்கிறது?

உண்மையில், எந்த ஊருல இருக்கேன், எந்த ஊருல தூங்குறேன்னு என்னாலேயே யூகிக்க முடியாத அளவுக்கு ஓடிக்கிட்டே இருக்கேன். பொதுவா, ஒரு திட்டமிட்ட வாழ்க்கை முறை என்னுடையது. காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துடறது, பத்திரிகைகளை வாசிக்கிறது, ஐஐடி வளாகத்துல நடைப்பயிற்சி, அடுத்ததாக வீட்டுல உடற்பயிற்சி, காலை உணவு, விருந்தினர் சந்திப்பு, அப்புறம் ‘முரசொலி’ அலுவலகத்துக்குப் போறது, அதன் பிறகு அறிவாலயம், அப்புறம் வீட்டுல மதிய உணவு, சின்ன தூக்கம், மீண்டும் சந்திப்புகள், திரும்பவும் மாலையில் அறிவாலயம், இரவு பொதுக்கூட்டங்கள், அப்புறம் வீடு, இரவு உணவு, கொஞ்ச நேரம் வாசிப்பு, தூக்கம்னு இருக்கும். ஆனா, தேர்தல் எல்லாத்தையும் மாத்திருச்சு. தேர்தல்னாலே அப்படித்தானே! அதுவும் இது தேர்தலா இல்லை; யுத்தமா ஆயிடுச்சு.

நீங்கள் செய்த முதல் தேர்தல் பிரச்சாரம் எது? இன்றிலிருந்து அன்றைய தமிழகத்தை நினைவுகூர்ந்தால், நாம் எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், எதையெல்லாம் இழந்திருக்கிறோம், என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

எனக்குப் பன்னிரண்டு வயசு இருக்கும். சென்னை மாநகராட்சிக்கு அப்போ தேர்தல் நடந்துச்சு. எங்க பகுதியிலேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு ஜேசுதாஸ்ங்கிறவர் திமுக சார்புல நின்னார். நானும் நண்பர்களும் சேர்ந்துக்கிட்டு சைக்கிள்ல முன்னாடி மைக்கைக் கட்டிக்கிட்டு உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு கோபாலபுரம் தெருக்கள்ல போனோம். அப்படித்தான் என் பேச்சு மைக்ல ஆரம்பிச்சுச்சு. கோபாலபுரத்துல சண்முகம் அண்ணன்னு நாங்க சொல்வோம், அவரோட சலூன்தான் எங்க கூடுகைக்கான இடம். அங்கேதான் ‘இளைஞர் திமுக’னு மன்றம் ஆரம்பிச்சோம். அடுத்து, 1967 சட்டமன்றத் தேர்தல்லேயும் கொடி புடிச்சோம். 1971 தேர்தல்ல நாடகம் போட்டோம். பெரிய ஆளாகி தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செஞ்சது அப்படிங்கிறது 1984-ல் நடந்துச்சு. இளைஞரணியைப் பெரிசாக் கட்டுற வேலையையும் சேர்த்து அப்ப பார்த்தோம். பரிதி இளம்வழுதி, திருச்சி சிவா இவங்களையெல்லாம் உள்ளடக்கி ஒரு குழு. கார்லேயே தமிழ்நாடு முழுக்கப் போனோம். இரவுல பயணம்; பகல்ல கூட்டங்கள். நான்தான் காரை ஓட்டுவேன். அன்னைக்குப் பார்த்த தமிழ்நாட்டுக்கும் இன்னைக்குப் பார்க்கிற தமிழ்நாட்டுக்கும் இடையில நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கு. முக்கியமா வறுமையை, பசியைப் பெரிய அளவுல ஒழிச்சுருக்கோம். ஆனா, இன்னும் நிறைய நாம முன்னேறியிருக்கணும். அது நடக்காமல் போக முக்கியமான ஒரு காரணம் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏற்படக்கூடிய தேக்கநிலை; திமுக கொண்டுவர்ற நல்ல திட்டங்களைத் திமுக கொண்டுவந்ததுங்கிற ஒரே காரணத்துக்காக அவங்க நிறுத்துறது தொடர் வளர்ச்சியில பெரும் முட்டுக்கட்டை. தமிழகம் இழந்திருக்கிறதா நான் நினைக்கிறது நல்ல சுற்றுச்சூழலை. இதை மாத்தணும்னுதான் கட்சியிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குன்னு ஒரு அணியை உருவாக்கினோம். வளர்ச்சின்னு பேசும்போதெல்லாம் சுற்றுச்சூழல் நலனையும் கவனத்துல எடுத்துக்கணும்னு நெனைக்கிறேன். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கான வழி, இல்லையா?

காலமும் மக்களும் கொண்டுவந்துவிட்ட இடம் இது: கமல் பேட்டி


அரசியல் தலைவர்களுடன் தேர்தல் பிரச்சார வாகனத்தில் பயணிப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். ஒவ்வொரு தலைவரின் பேச்சையும் கேட்கவும் மக்களில் எந்தெந்தத் தரப்பினர் கூடுகின்றனர், தலைவர்கள் பேசும் எந்த விஷயங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள், முக்கியமாகத் தலைவர்களுக்கும் மக்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. அரசியலர் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், மக்களிடம் இயல்பான ஒரு உரையாடலை உருவாக்கிக்கொள்கிறார். இதுவரை திரையில் மட்டுமே பார்த்திருந்த மகத்தான கலைஞரை, அதுவும் ஒப்பனையற்ற முதிர்ந்த தோற்றத்தில் நேரில் காண்கையில் மக்கள் வாஞ்சையோடு ஓடிவருகிறார்கள். அன்போடு அவருடன் பேசவும், ஆசையோடு படம் எடுத்துக்கொள்ளவும் முந்துகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டமாகவே அது தெரிகிறது. ஆனால், அங்கே அரசியலும் தொழிற்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாக நீங்கள் குறிப்பிடும் ‘மையவியம்’ – அதாவது இடது, வலது இரண்டும் கலந்த நடுநிலையான சென்டரிஸம் – பேசும் கட்சிகள் உலகம் முழுக்க வெவ்வேறு போக்குகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இஸ்ரேலில் உள்ள மையவியக் கட்சிகளும் பிரேசிலிலுள்ள மையவியக் கட்சிகளும் ஒரேவிதமான சிந்தனைகளை, வெளிப்பாடுகளைக் கொண்டவை அல்ல. இடதுசாரிகளையோ வலதுசாரிகளையோ வரையறுப்பதுபோல மையசாரிகளைத் துல்லியமாக வரையறுக்கவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை; பெரும்பாலும் அவர்களுடைய போக்கு சமரசமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் நீங்கள் முன்னிறுத்தும் மையவியத்துக்கான அர்த்தப்பாடு என்ன?

ஜனநாயகம் என்று சொல்லும்போது சாக்ரடீஸ் சொன்னதும் இன்றைக்கு இருப்பதும் வேறுவேறு; இன்னும் சொல்லப்போனால், பிரிட்டனில் பேசுவதும், அமெரிக்காவில் பேசுவதும், நாம் இங்கே புழக்கத்தில் வைத்திருப்பதும் வேறுவேறு. சென்டரிஸமும் அப்படித்தான். இங்கே புழக்கத்தில் நமக்கானதை உருவாக்குவோம். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் நடுநிலைமை; அரசியலற்ற நிலை அல்ல இது. வள்ளுவர் போற்றும் நிலை. ஒரு திறந்த மனப்பாங்கு. மரபோ நவீனமோ பகுத்தறிந்து நமக்கான விஷயங்களை எடுத்துக்கொள்வோம்.

பிரான்ஸில், ‘மன்னராட்சியானது புரட்சி மூலம் தூக்கி வீசப்பட வேண்டும்’ என்று முடிவெடுத்தவர்களை இடதுசாரிகளாகவும், ‘மன்னராட்சியே நீடிக்கட்டும், புரட்சி தேவையற்றது’ என்று முடிவெடுத்தவர்களை வலதுசாரிகளாகவும் வரையறுத்துக்கொண்டால், ‘மன்னராட்சி போக வேண்டும், அதே சமயம் புரட்சி வேண்டியது இல்லை’ என்று முடிவெடுத்தவர்களை மையசாரிகள் என்று வரையறுக்கலாம். கேள்வி என்னவென்றால், புரட்சி நடக்காமல் எப்படி மன்னராட்சி முடிவுக்கு வரும்? புரட்சியை வன்முறை என்று வரையறுப்போமானால், மன்னராட்சியின் கொடுங்கோன்மையை என்னவென்று வரையறுப்பது? அப்படியென்றால், மையவியம் என்பது கிட்டத்தட்ட வலதுசாரிகளுக்கு அருகில் உள்ள நிலைப்பாடுதானே?

இல்லை. இருக்கும் அமைப்பிலுள்ள சமூகக் கொடுமைகள் அப்படியே நீடிக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை. அதே சமயம், வன்முறை அல்லது அத்துமீறல் மூலம் அதை நிலைநாட்டுவதும் எங்கள் வழிமுறை இல்லை. நான் போராட்ட வடிவங்களுக்கும்கூட இதைத்தான் சொல்கிறேன், அரசு அலுவலகங்கள் மீதும், பேருந்துகள் மீதும் கல் எறிவதுதான் போராட்ட வடிவம் என்றால், அத்தகைய போராட்டத்தில் எங்கள் இயக்கத்தினர் ஒருநாளும் பங்கேற்க மாட்டார்கள். ஆயுதப் படைகள் இல்லாமல் புரட்சி நடக்காது என்பது ஒரு பழைய நம்பிக்கை. புரட்சி என்பது வன்முறை வடிவத்திலிருந்து வெளியேறி நிறையக் காலம் ஆகிவிட்டது. அது வெற்றி பெறுமா என்று கேட்காதீர்கள். அந்த நம்பாமைதான் சென்டரிஸத்துக்கு எதிரி. இதற்கு உதாரணப்படுத்தும்போது நான் காந்தியை அழைத்துக்கொள்வேன். தன் கருத்தை விளக்கத் தடுமாறும்போது மார்டின் லூதர் கிங்கும் காந்தியைத்தான் அழைத்துக்கொண்டார்.

இந்தியாவில் இன்று மையவியக் கட்சிகளாக நீங்கள் எதையெல்லாம் பார்க்கிறீர்கள்?

எங்களைத்தான் சொல்ல வேண்டும்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா: சீமான் பேட்டி


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வீட்டின் மாடியில் உள்ள அவருடைய அலுவலகமானது நூலகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த சீமான், வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த நேரத்தில் நூலகத்தைப் பார்வையிட முடிந்தது. சங்கத் தமிழ் இலக்கியங்கள், பண்டைத் தமிழர் வரலாற்று நூல்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள், சூழலியல் நூல்கள் வரை விரிவான தொகுப்புகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் ஓரிடத்தில் தென்பட்டபோது, எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். குறிப்புகள் நிமித்தம் பக்கங்களின் ஓரங்கள் ஆங்காங்கே மடிக்கப்பட்டிருக்கின்றன. நம்மாழ்வார் நூல்களைப் பிரித்தபோது நிறைய அடிக்குறிப்புகளைக் காண முடிந்தது. ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பில் இருக்கும் அறிகுறிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. மேஜையில் உள்ள ‘ஜென் கதைகள்’ நூலில் மடிக்கப்பட்டிருந்த பக்கத்திலுள்ள கதையை சீமானுடைய ஒரு பேச்சில் கேட்டது நினைவுக்கு வருகிறது. சீமான் வந்துவிட்டார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வாசிப்பீர்கள்?

சாதாரண நாட்கள்ல காலையில் இரண்டு மணி நேரம் வாசிப்பேன். வாசிப்பைத் தவறவிடக் கூடாதுங்கிறதுக்காகவே மாலையில்தான் உடற்பயிற்சின்னு வெச்சுக்கிட்டேன். வருஷத்தில் சில நாட்கள் முழுக்க உட்கார்ந்துடுவேன். கணக்கு வழக்கில்லாமல் அப்போ வாசிப்பேன்.

இப்போது யாரை அதிகம் வாசிக்கிறீர்கள்?

அதிகம் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களை வாசிக்கிறேன். அவர் எங்க ஊர் பக்கம்கிறதாலோ என்னவோ ரொம்ப நெருக்கமா அவரோட எழுத்துகள் இருக்குது. அம்பேத்கர், நம்மாழ்வார் எழுத்துகளை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். என்னோட பழக்கம் என்னன்னா, இந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம், அந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம் அப்படின்னு வாசிப்பேன்; ஒரே புத்தகத்தோடு முழுசா உட்காருவது கிடையாது. நமக்கு ஒண்ணும் தெரியலைங்கிறதுதான் படிக்கப் படிக்கத் தோணுது. யாருக்கும் குறைவில்லாம நம்மாளுங்க சிந்திச்சுருக்காங்க, எழுதியிருக்காங்க. ஆனா, இந்த இனம் இப்படி அதிகாரம் அற்று இருக்குங்கிறதுதான் வரலாற்று முரணா இருக்கு.

ஒவ்வொரு இனமும் காலம் நெடுகிலும் மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளையும் போக்குகளையும் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு இங்கே குறைந்தது நூறாண்டு அரசியல் வரலாறு இருக்கிறது. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பேசிய பெரியாரும், அண்ணாவும் பிற்பாடு ‘திராவிட நாடு’என்று பேசலானதும், பின்னர் இந்தியக் கூட்டாட்சியில் மாநில சுயாட்சியை முன்னிறுத்திப் பேசலானதும் சமரசங்கள் மட்டும் அல்ல; அடுத்தடுத்த கட்டப் பரிணாமங்கள். உங்களுடைய ‘நாம் தமிழர் கட்சி’யின் இலக்கு என்ன? கடைசியாக அண்ணா விட்டுச்சென்ற கூட்டாட்சி எனும் புள்ளியின் தொடர்ச்சியா அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் தொடக்கப் புள்ளியான தனிநாடு கனவா?

தனி நாடு அல்லது கூட்டாட்சி அதுஇதுன்லாம் நான் பேசப்போறதில்லை. என் இனத்துக்குத் தேவை அதிகாரம். பல்லாயிரம் ஆண்டுகளா இது தமிழ்த் தேசம்தான்; இந்தியாங்கிற நாடு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து உருவாவதற்கு முன்னாடியும் இது தமிழ்த் தேசம்தான்; இப்போதும் தமிழ்த் தேசம்தான். ஆட்சியாளர்கள் யாருங்கிறதை விடுங்க. இந்தியாங்கிறதே பல நாடுகளோடு ஒன்றியம்தானே! ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா’ மாதிரி ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’. அப்படிச் செய்வோம்! ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி’ என்பது அண்ணா முன்வைத்த முழக்கம். எல்லா தேசிய இனங்களுக்கும் அதுதான் சரி. இப்போதுள்ள ஆட்சிமுறையில மாநில உரிமைகள் பறிபோய்க்கிட்டே இருக்கு. வட இந்தியர்கள்தான் நாட்டின் முதன்மை அமைச்சர்களாக ஆக முடியும்ங்கிற சூழல் போதாதா, இங்குள்ள அக்கிரமச் சூழலைச் சொல்ல? இந்த நிலை மாற்றப்படணும். என் மக்களுக்கும் அதிகாரம் வேணும். இதைத்தான் நான் பேசுறேன்.

சமூகநீதியை அடுத்த கட்டத்துக்கு பாஜக கொண்டுசெல்லும்: எல்.முருகன் பேட்டி

ஓராண்டுக்கு முன் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டபோது ‘யார் இவர்?’ என்று பலர் ஆச்சரியத்தோடு கேட்டார்கள். சொந்தக் கட்சியிலேயே அதிருப்தியில் சில முன்னணித் தலைவர்கள் பாஜக தலைமை அலுவலகமான ‘கமலாலய’த்துக்கு அன்றாடம் வருவதை நிறுத்திக்கொண்டதைக் கேள்விப்பட முடிந்தது. இன்று நிலைமை தலைகீழ் ஆகியிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் கட்சிக்குள் தன்னை வலுவாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் முருகன்; கட்சிக்கு வெளியிலும் செயல்படும் தலைவராகப் பார்க்கப்படுகிறார். 2021 சட்டமன்றத் தேர்தல் ஒருவகையில் முருகனின் தலைமையைப் பரிசோதிக்கும் களமும் ஆகியிருக்கிறது. 

ஒருகாலத்தில் ‘பிராமண - பனியா கட்சி’ என்று சொல்லப்பட்டுவந்த பாஜகவின் முகம் மோடி - ஷா காலகட்டத்தில் குறைந்தபட்சம் மேல்பூச்சு அளவிலேனும் மாறியிருக்கிறது; கட்சிக்குள் சமூகங்களுக்கு இடையிலான பொறுப்புப் பகிர்வு முன்னர் இல்லாத அளவுக்கு நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கேள்வி என்னவென்றால், உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா? 

முழுச் சுதந்திரமாகவே செயல்படுகிறேன். என்னை எல்லோருமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். காலையில் ஆறு மணிக்கு எழுந்தால் இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் படுக்கச் செல்கிறேன்; மதியத் தூக்கம்கூடக் கிடையாது. கட்சியினர் என்னுடைய எதிர்பார்ப்பை அறிந்திருக்கிறார்கள். அதனால், எனக்கு இணையாக ஓட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் இருக்கிறது. எந்த விஷயத்திலும் சுதந்திரமாகவே முடிவெடுக்கிறேன் என்றாலும், எல்லா விஷயங்களுக்கும் மூத்தவர்களிடம் கலந்தாலோசிக்கிறேன். கீழிருந்து வந்த மோடிஜி மேலே இருப்பது இன்றைய கட்சிக்கு உள்ள பெரிய உத்வேகம். நீங்கள் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கட்சிக்காக நேர்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை பாஜகவில் மட்டுமே இருக்கிறது. 

கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின் - திருமாவளவன் பேட்டி


விசிக தலைவர் திருமாவளவனை அந்தக் கட்சியின் தலைமையகத்தில் சந்தித்தபோது இரவு சரியாக 12 மணி ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் வரிசை கட்டி நிற்கும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத சிலர் ஆவேசமாக அவரிடம் முறையிடுகின்றனர். பொறுமையாகப் பேசி ஆற்றுப்படுத்துகிறார். திருமாவளவனின் முகம் மட்டுமின்றிக் கை, கால்களிலும்கூட வீக்கத்தைக் கவனிக்க முடிந்தது. “நேரத்துக்குச் சாப்பிடறதும் இல்லை; ஒழுங்கா ஓய்வு எடுக்கிறதும் இல்லை; நேற்று தூங்கப் போகும்போது அதிகாலை நாலு மணி; இன்னைக்கும் எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை; இப்படித்தான் ஓடுது; ஆனா, ஓய்வொழிச்சல் பார்த்து உட்கார முடியாத யுத்தம் இது” என்று புன்னகைக்கிறார்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை சனாதனத்துக்கு எதிரான போர் என்று அறிவித்திருக்கிறீர்கள். சனாதனம் என்பதை இன்றைய தேதியில் எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள், உங்கள் அறிவிப்பை விளக்க முடியுமா?

சனாதனத்தின் உள்ளடக்கம் அசமத்துவம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வைத் தீர்மானித்து இங்கே ஒரு கட்டுமானம் இருக்கிறது இல்லையா, அதை உருவாக்கியதும், அது அழிந்துவிடாமல் பராமரிப்பதும் சனாதனம். இந்தச் சாதியக் கட்டுமானத்தை அப்படியே பாதுகாத்திடவும், அதை உடைத்து நொறுக்கிவிட்டு சமூகநீதிக் கட்டுமானத்தை உருவாக்கிடவும் என்று இங்கே இரு தரப்பிலும் வேலைகள் நடக்கின்றன. சனாதனக் கட்டுமானத்தை அப்படியே நீட்டிக்கச்செய்ய உழைக்கும் அமைப்பாகவே நான் சங்கப் பரிவாரங்களைக் காண்கிறேன். தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் சாதி – மத வரையறைகளைக் கடந்து அமைப்புகளாக ஒருங்கிணைந்து, கீழே உள்ளவர்களையும் அதிகாரமயப்படுத்தும் சக்திகளை நாசப்படுத்த முற்படும் அரசியல் சக்தியாகவே பாஜகவைக் கருதுகிறேன். அதாவது, பாஜக என்பது சனாதனத்தின் அரசியல் வடிவம். அது தமிழ்நாட்டை இப்போது சூறையாட முற்படுகிறது. இங்குள்ள ஜனநாயக சக்திகளை அழிக்க முற்படுகிறது. ஆகையால்தான் அதற்கு எதிரான போர் என்று இந்தத் தேர்தலைக் குறிப்பிடுகிறேன்.

சமூகநீதியைத் தங்களுடைய மைய இலக்குகளில் ஒன்றாகப் பேசும் அமைப்புகளின் அரசியலை மோடியின் பாஜக இந்த ஏழாண்டுகளில் பல இடங்களிலும் உடைத்திருக்கிறது; குறிப்பாக, வட இந்தியாவில் இதை அதிகம் காண்கிறோம். இதில் தலித் அரசியல் இயக்கங்கள் பெரும் தேக்கத்தையும் சிதிலத்தையும் அடைந்திருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். சொல்லப்போனால், தேசிய அளவில் விசிக அளவுக்குத் துடிப்போடு முன்னகரும் அம்பேத்கரிய இயக்கம் ஒன்று தென்படவில்லை. எங்கே தவறு?

தலித் இயக்கங்களை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் வகை, அம்பேத்கரை வெறுமனே ஒரு தலைவராக உள்வாங்கிக்கொண்டு திரளும் இயக்கங்கள்; இவை அம்பேத்கரைக் கருத்தியல்ரீதியாக உள்வாங்குவதில்லை; அம்பேத்கர் என்ற சென்டிமென்ட், தலித் என்ற சென்டிமென்ட் இரண்டோடும் முடிந்துவிடுகின்றன; காலப்போக்கில் இவை சாதியுணர்வைப் பிரதிபலிக்கும் இயக்கங்களாகவும் ஆகிவிடுகின்றன. இரண்டாம் வகை, அம்பேத்கரைக் கருத்தியல்ரீதியாகப் படித்து உள்வாங்கி, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களோடு அமைப்பாகத் திரளும் இயக்கங்கள். அதிகாரத்தை நோக்கிய அணிதிரட்டல் ஒருபுறம்; புரட்சிகர மாற்றத்தை நோக்கிய அணிதிரட்டல் மறுபுறம். பொது நீரோட்டத்தில் இணைந்து பணியாற்றும்போது எங்கே சமரசம் செய்வது, எங்கே உறுதியாக நிற்பது; எது நட்பு முரண், எது பகை முரண் என்பதில் பெரிய தெளிவு தேவை. அந்த இடத்தில் ஏற்படும் சறுக்கலே இந்த நிலைக்குக் காரணம். இந்திய அளவில் அம்பேத்கரிய இயக்கங்கள் இன்று மெல்லக் கரைகின்றன என்றால், அதற்குக் கருத்தியல் சிதைவுதான் காரணம்.

அப்படியென்றால், காந்திபோல அம்பேத்கரும் ஆகிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாமா? அதாவது, சாராம்சத்துக்கு அப்பாற்பட்ட அடையாளமாக அவருடைய அரசியல் எதிரிகளாலும் எப்படி காந்தி சுவீகரிக்கப்படுகிறாரோ அப்படி அம்பேத்கரும் ஆகிவருகிறார் எனலாமா?

அதுதான் உண்மை. வெற்று அடையாள அரசியல் சீக்கிரமே நீர்த்துவிடும். அம்பேத்கரின் சிலைகளையும் படங்களையும் அவருடைய லட்சியத்தை உள்வாங்காமல் வெறுமனே நம்முடைய தேவைக்காகப் பயன்படுத்தினால் அம்பேத்கர் ஒரு கமர்ஷியல் கமாடிட்டி மாதிரி ஆகிவிடுவார். இது ஒரு சுரண்டல்தான்.


பாஜக மாதிரி ஆக வேண்டியது இல்லை காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரி பேட்டி


பரபரப்பும் படாடோபமும் கூடிய அரசியல் யுகத்திலிருந்து விலகிய நிதானச் சூழலில் இருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன். தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் தலைவர் ஆகியிருக்கும் கே.எஸ்.அழகிரி அதே நிதானத்தைப் பிரதிபலிக்கிறார். தொண்டர்கள் எளிதாக தலைவர் அலுவலகத்தின் உள்ளே செல்ல முடிகிறது, அவரைச் சந்திக்க முடிகிறது; கோஷ்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோர்க்கும் பொதுவான நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

ஒரு கிராமத்திலிருந்து ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று படிப்படியாக மேல் நோக்கி வந்தவரான நீங்கள் காங்கிரஸை அதன் பின்னடைவிலிருந்து மீட்டு மேல் நோக்கி உயர்த்த எது சரியான வழி என்று நம்புகிறீர்கள்?

காந்தி காட்டிய வழிமுறைதான்: செயல்பாடு, செயல்பாடு, செயல்பாடு.

இந்த ஓராண்டில் கட்சிக்குள் என்ன முக்கியமான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறீர்கள்?

இரண்டு விஷயங்கள். பெரிய ஒற்றுமையைக் கொண்டுவந்திருக்கிறோம். எனக்கு என்று ஒரு கோஷ்டியை நான் பராமரிக்கவில்லை. முரண்பாடுகளை மதிப்பவன் நான். எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை என்பது சாத்தியமே இல்லை. அது இயற்கையும் இல்லை. அதனால் நான் என்ன நினைப்பேன் என்றால், ‘இந்த இயக்கம் என்பது எல்லோரும் சேர்ந்ததுதான். நம்முடைய கருத்துகளிலிருந்து மாறுபட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் நமக்கு அந்நியமானவர்கள் அல்ல. எல்லோர் அறிவும் ஆற்றலும் இயக்கத்துக்கு முக்கியம். அதனால் அவரவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று நினைப்பேன். விளைவாக எந்த நிகழ்ச்சி என்றாலும், மேடையில் எல்லா முக்கியத் தலைவர்களும் ஒன்றாக அமரும் இணக்கம் உருவாகியிருக்கிறது. அடுத்து, புதிதாக மாநிலக் குழு அமைத்திருப்பதோடு, பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறோம். மாநிலத் துணைத் தலைவர்களாக 32 பேர், பொதுச்செயலர்களாக 43 பேர், செயலர்களாக 103 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மிகச் சாதாரண குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். மேல்மட்டத்தில் நடந்திருக்கும் இந்த மாற்றங்கள் கீழ்மட்டம் நோக்கிச் செல்கின்றன. அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்திருப்பது செயல்பாடுகளில் வெளிப்படுகிறது. சென்னையில் ஒரு கூட்டம் என்றால், பத்தாயிரம் பேர் திரளுகிறார்கள். முன்பு இது சாத்தியம் இல்லை.

பொறுப்புப் பகிர்வு நல்ல விஷயம். அதிகாரப் பகிர்வாகவும் அது அமைந்திருக்கிறதா?

அடிப்படையில் அரசியல் என்பது சேவைக்கான களம். இங்கே ஒருவருக்குப் பொறுப்பு அளிக்கப்படுவதானது, அவர் களத்தில் உழைப்பதற்கான ஓர் அங்கீகாரம். அதேசமயம், முன்பு 10 பேர் உட்கார்ந்து பேசி முடிவெடுத்து செயலாற்றிய இடத்தை இப்போது 300 பேர் உட்கார்ந்து பேசி செயலாற்றுவதாக மாற்றும்போது அது அதிகாரப் பகிர்வும்தானே!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுபவற்றுள் ஐந்தில் ஒரு பங்கு தொகுதிகள் தலைவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது பொறுப்புப் பகிர்வா, அதிகாரப் பகிர்வா?

இரண்டுமேதான். குடும்ப/ வாரிசு அரசியலுக்கான பங்கு குறைய வேண்டும்; குறைந்திருக்கிறது. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே கட்சிக்கு உழைப்பவர்களின் பங்களிப்பை முற்றிலும் நிராகரித்திட முடியாது இல்லையா?

சமஸ் சிந்தனைகளின் அர்த்தம்: தமிழவன்


சமஸின் ‘அரசியல் பழகு’ நூலைப் படித்தபோது என் மனம் மிகுந்த உற்சாகம் கொண்டது.

சமீப காலத்தில் பலர் அவ்வப்போது சமஸ் பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். எனக்கும் சமஸுக்கும் சுமார் 35 வயது வேறுபாடு. சமஸ் நூலைப் படிக்க ஆரம்பித்தபோது, ‘மரபையும் மேற்கையும் கலந்து சுவீகரித்துக்கொண்டு வளர்ந்துள்ளாரே, என் போன்ற ஒருவரிடம் இல்லாத பல விஷயங்களை இவர் கொண்டுள்ளாரே!’ என்ற வியப்பு எழுந்ததோடு, சமஸின் சிந்தனை அடிப்படைகள் எவையாக இருக்கும் என்ற கேள்வி தோன்றியது. அதோடு சமஸின் தலைமுறையில் யார் யார் இவரைப் போல் சிந்திக்கிறார்கள் என்று தேடவும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இன்றைய அரசியலின் பகட்டுக்கும் பதவி போகங்களுக்கும் வெளியில் இலக்கியம், சிந்தனை எனப் பயணப்பட்டு மேற்கத்தியச் சிந்தனைகளின் ஆழமான சில பகுதிகளைத் தமிழோடு சேர்க்க மிகுந்த பிரயத்தனங்கள் செய்பவர்களில் ஒருவன். பெருவாரித் தமிழ்ச் சமூகம் எங்களைப் போன்றவர்களின் போக்குகளை உடனடியாக அங்கீகரிக்காது என அறிந்து சிறுபத்திரிகைகளோடு கடந்த ஐம்பதாண்டுகளாக சிறுவாரித்தன்மையோடு அணி சேர்ந்திருப்பதே எங்களுடைய இயல்பாக இருந்திருக்கிறது. ஒருவகையில் பெருவாரியின் தமிழ் வெளிப்பாட்டை Subvert  செய்பவர்கள், அவர்களோடு உறவற்று இருப்பதில் மகிழ்ந்திருப்பவர்கள் என்றும்கூட எங்களைச் சொல்லலாம். இவ்வளவுக்கும் பல பல்கலைக்கழகங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தாலும், சிறுவாரியே என்னைப் போன்றவர்கள். சமஸ், பெருவாரித் தமிழ்ச்சமூகத்தோடு தொடர்புடையவர். கலாச்சாரம் மட்டுமே எல்லை என்று என்னைப் போல் குறுகாமல், அரசியலும் சார்ந்து பெருவாரித் தமிழ்ச் சமூகத்தோடு உரையாடும் – எனக்குத் தொடர்பில்லாத – ஊடகத் துறை சார்ந்தவர்.

நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, இதழியலாளர் ஏ.என்.சிவராமன் எழுதிய மார்க்சியத்துக்கு எதிரான விஷயங்கள் அவரது சிந்தனைக் கனத்தை கவனிக்க வைத்தாலும் பொதுவான எம்போன்றோரின் திராவிட – மார்க்சிய பங்கெடுப்பு, காரணமாக அவரை மனதளவில் மறுதலித்ததோடு, ‘ஊடகத் துறையில் ஒருவர் சிந்தனையாளராய் வந்துவிடுவாரா என்ன!’ என்ற இளக்காரமான பார்வையையே இருந்தது. அதனால்தான் சமஸின் 13 கட்டுரைகளைக் கவனமாய் படித்த எனக்கு வியப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படித் தமிழகத்தில் ஊடகத் துறையானது சிந்தனைத்தளத்தோடு தொடர்புற்றிருக்க முடியும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதனாலேயே சமஸ் மீதான என் வியப்புப் பன்மடங்கு ஆயிற்று.

அறிந்துகொள்வதும் பழகுவதும்: சீனிவாச ராமாநுஜம்

பழகுதல் என்பது செயல்பாட்டோடு தொடர்புகொண்டது. சிந்தனையோடு மட்டுப்பட்டதல்ல. பயிலுதலோடு தொடர்புகொண்டது. அரசியலைப் பயிலச் சொல்கிறார் சமஸ். கருத்தியல்ரீதியான, மொழிரீதியான உலகத்தோடு அவர் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ள மறுக்கிறார். பல சமயங்களில் சித்தாந்த அரசியல் வெறுமனே கருத்தியல்ரீதியாக, மொழிரீதியாகச் சுருங்கிப்போகிறது. இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது சமஸின் அடிப்படையாக இருக்கிறது.

அரசியலை ஒரு சித்தாந்தமாக, கோட்பாடாக, கருத்தாக முன்வைத்து நம்மை நாம் வரையறுத்துக்கொள்ள முடியும். அது செயல்பாடாக மாறாமல் போகலாம். இந்தப் போதாமையைக் கணக்கில் கொண்டே இந்நூலின் தலைப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அனுபவங்களோடு தொடர்புகொண்டது அரசியல். உடலோடு தொடர்புகொண்டது. புலன்களோடு தொடர்புகொண்டது. அரசியலைக் கருத்தாக மட்டுமல்லாமல், அதைப் பழக முற்படும்போது நம்முடைய அரசியல் நிலைப்பாடு வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டதாக இல்லாமல், மனிதர்களோடும் அன்றாட வாழ்க்கையோடும் இணைந்ததாகிறது. இதனால்தான், ‘குப்பையிலிருந்து தொடங்குவோம்’ என்கிறார் சமஸ்.  

தமிழகத்தில் பாஜகவின் முதன்மைக் குறி யார்?




இது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முடக்கப்படலாம் என்கிற சூழலை வரலாற்றில் மூன்று சந்தர்ப்பங்களில் திமுக எதிர்கொண்டிருக்கிறது. நெருக்கடிக் காலகட்டத்தில் இப்படியொரு பேச்சு இருந்தபோது, கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாவரும் சிறையில் தள்ளப்படலாம் என்ற வதந்தியும் உலவியது. சரி, அப்படி ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது? அமைப்பின் அதே பெயரில் தலைமறைவு அரசியலில் ஈடுபடுவதா அல்லது புதிய பெயரில் ஒரு அமைப்பைக் கட்டுவதா; யாரெல்லாம் அதை நிர்வகிப்பது? இப்படிப் பல எண்ணங்கள்.  

அன்றாடம் பொழுது சாய்ந்தால் மெரினா கடற்கரையில், நெருக்கமான கட்சித் தோழர்களுடன் அமர்ந்து விவாதிக்கும் வழக்கம் அப்போது கருணாநிதிக்கு இருந்தது. அன்றைக்கு நெடுநேரம் அமைதியாக இருந்தவர் சொன்னார், “வாழ்வோ சாவோ திமுகவோடுதான். திமுக இல்லாவிட்டால் என்னவாகும் என்ற கேள்விக்கு எனக்கு ஒரே ஒரு ஆறுதல்தான் இருக்கிறது. அதிமுகதான் அது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக முடக்கப்பட்டாலும், அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட அதிமுக நம்மைக் கொஞ்சமேனும் பிரதிபலிக்கும். நிச்சயமாக தேசியக் கட்சிகளைப் போல அதிமுகவினர் தமிழ்நாட்டுக்கு அந்நியமாகச் செயல்பட மாட்டார்கள்!”

அதிமுகவின் தலைமைப் பதவியை அலங்கரித்த எம்ஜிஆர், ஜெயலலிதா எந்தச் சந்தர்ப்பத்திலும் திமுகவைப் பற்றி இப்படிக் கூறவில்லை என்றாலும், திமுக அல்லது அதிமுக என்ற இருமுனை அரசியலைத் தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நிலைநாட்டியதில் இரு தரப்புமே உறுதியாக இருந்தார்கள் என்று சொல்ல முடியும். அரசியல் களத்தில் பரம வைரிகளாகச் செயல்பட்டுவந்த திமுகவும் அதிமுகவும் இன்னொரு தரப்பின் மீது கொண்டிருந்த இந்தப் பற்றுறுதியை எப்படிப் பார்ப்பது? 


இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை


அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீட்டித்த நிம்மதியான வாழ்வுக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ்பாவ்லோ என்று மனித குலம் உருவாக்கிய கனவுப் பெருநகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்கானதும், பெருநகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்களும், சிறுநகரங்களும் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற இருப்பதாகச் சொல்கின்றனர்; குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அதேசமயம், பெருநகரங்களிலிருந்து வெளியேறியோர் மீண்டும் பிழைப்புக்காக அதே பெருநகரங்களை நோக்கித் திரும்புகின்றனர்.

இந்தியாவில் இந்த விவாதம் இன்னும் கூடுதல் ஆழத்துக்குச் செல்கிறது. டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை என்று வாய்ப்புள்ள பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயரும் பல கோடிப் பேர் இடையில் தங்கள் மாநில எல்லையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கின்போது வெளிமாநிலப் பெருநகரங்களிலிருந்து திரும்பிய பலர் தங்கள் மாநில எல்லையைத் தொட்டதும் மண்ணில் விழுந்து வணங்கியதும், மண்ணை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டதும், தேம்பி அழுததுமான உணர்ச்சிப் பெருக்குக் காட்சிகள் சாதாரணமானவை அல்ல; உள்ளபடி நகரம் – கிராமம் விவாதத்தைத் தாண்டி, இந்தியாவில் மாநிலம் என்னவாக அர்த்தப்படுகிறது என்ற ஆழமான கேள்வி நோக்கி நம்மைத் தள்ளும் வெளிப்பாடுகள் அவை.
 

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் கிழக்கு, மேற்கு எல்லைகளை ஒட்டி பல லட்சம் பேர் அகதிகளாக நடந்ததோடு, இந்தக் கொள்ளைநோய் ஊரடங்குக் காலகட்டத்தில் தத்தமது மாநில எல்லைகளை நோக்கிப் பல லட்சம் பேர் நடந்ததைப் பலர் இணைத்துப் பேசியது சரியான ஓர் உருவகம்தான். புலம்பெயர்வை நாம் தொழிலாளர்கள் பிரச்சினையாக அல்லது பொருளாதாரப் பிரச்சினையாக விவாதித்துக் கடந்துவிட முனைகிறோம். அது சரியல்ல. இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சமூக – அரசியல் விவகாரமும் இது. தன்னுடைய மொத்த நிர்வாகப் பார்வையையும் இந்தியா மறுவரையறைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்… தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!


நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத்தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த அபிலாஷையை டெல்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டுகளாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. டெல்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.

ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?

புதிய கல்விக் கொள்கை ஆர்வம் கொள்ளும் மும்மொழிக் கொள்கை - தாய்மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டெல்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண்டாக்கியிருக்கும் சமூக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ் - ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலைநோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.

உலகம் எந்த மொழியில் படிக்கிறது?

உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.

பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ - அரபி மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்திருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழிகளைக் கற்பது ஆர்வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமூகவியலோ படிப்பவர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக ஐந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.

புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப்பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேகமானது; இந்தியாவோடு ஒப்பிட நெருக்கமானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமூகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப்பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.

370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு


நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதல்வர் நெஃப்யூ ரியோவுக்கு முன்னுதாரணமற்ற ஒரு கடிதத்தை எழுதினார். ‘நாகாலாந்தின் ஆயுதக் குழுக்கள் தேச ஒற்றுமையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்தும் வகையில், இந்திய அரசமைப்பு மூலம் நிறுவப்பட்ட மாநில அரசின் சட்டபூர்வமான இருப்புக்குத் தினமும் சவால் விடுகின்றன’ என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். நாகாலாந்தில் ஒரு இணை அரசுபோல ஆயுதக் குழுக்கள் செயல்படுவதையே ஆளுநர் ரவி இப்படிக் குறிப்பிட்டார். அவரது குற்றச்சாட்டின் மைய அம்சம், அந்த ஆயுதக் குழுக்கள் மக்களிடத்தில் வசூலிக்கும் பணம்.

ஆயுதக் குழுக்களில் முக்கியமானதான நாகாலாந்து தேசிய சோசலிஸ கவுன்சில் (ஐமு) ஆளுநர் ரவிக்கு எதிர்வினை ஆற்றியது. ‘மக்களிடம் பணப்பறிப்பு எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை’ என்று குறிப்பிட்ட அந்த இயக்கம், ‘அதே நேரம், நியாயமான வரிகளை வசூலிக்கிறோம். மக்களிடமிருந்தும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் வரி வசூலிப்பது ஒரு தேசம் மற்றும் இறையாண்மை கொண்ட மக்களின் உள்ளார்ந்த உரிமை. நாகா அரசியல் இயக்கத்தை நடத்துவதற்கான அடிப்படை நிதியாதாரம் இந்த வரிகள். கடந்த காலத்தில் அமைதிப் பேச்சுகள் நடத்திய இடைத்தரகர்களும் இந்திய அரசுத் தரப்பும் இதை விதிகளுக்கு உட்பட்டதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், இது எப்போதும் ஒரு பிரச்சினையே இல்லை’ என்று கூறியது.

நாகாலாந்தையோ, இந்தியாவில் ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் நிறைந்த பிராந்தியங்களையோ அறிந்தவர்களுக்கு இது எந்த ஆச்சரியத்தையும் தராது. நான் மணிப்பூர் சென்றிருந்தபோது அதன் தலைநகர் இம்பாலில் உள்ள புகழ்பெற்ற இமா சந்தையில் மணிப்பூரின் சுதந்திர நாளைக் கொண்டாடும் சுவரொட்டிகளைக் கண்டேன். பாதுகாப்புப் படையினர் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். அகண்ட நாகாலாந்தைக் கோரும் குழுக்களும் மணிப்பூர் ஆயுதக் குழுக்களைப் போலவே ஆகஸ்ட் 14 நாளை நாகாலாந்தின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகின்றன. இந்தியாவின் மைய நீரோட்டத்தை நோக்கி இத்தகு குழுக்களையும் மக்களையும் இணைக்கும் பேச்சுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

காங்கிரஸ், பாஜகவினருக்கு காமராஜரிடமிருந்து ஒரு பாடம்




கொஞ்சம் அரதப்பழசான கதைதான் என்றாலும், இதிலுள்ள நுட்பமான பல இழைகள் வெவ்வேறு காலகட்டங்களில்  வெவ்வேறு விவாதங்களுக்கு நம்மைக் கொண்டுசேர்க்கின்றன. காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துகிறார் அண்ணா. தேர்தல் முடிவுகள் வானொலி அறிவிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள அண்ணாவின் வீடு குதூகலத்தில் இருக்கிறது. விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளியானதும் வேட்டுச் சத்தம் அதிர்கிறது. கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். கடும் கோபத்தோடு வீட்டிலிருந்து  வெளியே வரும் அண்ணா, கட்சிக்காரர்களைக் கடிந்துகொள்கிறார். “உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள். தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு தமிழன் காமராஜர் இடத்துக்கு வர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்துக்கு உரியதல்ல. அது நம்முடைய தோல்வி!” தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாவிடம் வாழ்த்துப் பெற வரும் சீனிவாசனிடமும் இதையே சொல்கிறார் அண்ணா. “என்னை மன்னித்துவிடு சீனிவாசா... உன்னுடைய வெற்றி தர வேண்டிய மகிழ்ச்சியை காமராஜரின் தோல்வி தந்த வருத்தம் பறித்துவிட்டது!”

அரச வன்முறையின் ஊற்றுக்கண்



நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுடைய கடை மூடப்படாததுதான் காரணம் என்கிறார்கள். ஆக, நீங்களும் இப்படி ஒருநாள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்பாமல் காய்கறிக் கூடையோடு சாலையில் நிற்க நேர்ந்தால் அதற்காக உயிரைவிட நேரிடலாம்.

அடிபட்டே உயிரை விட வேண்டும். நியாயம் கேட்க வீட்டிலிருந்து உங்கள் பிள்ளை வந்தால், அவரும் மூங்கில் கழிகள் உரிய அடிபட்டுச் சாக வேண்டும். குதத்தில் காக்கிச்சட்டையர்களின் லத்திகள் திணிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் குத்திக்குதறி அவர்கள் விளையாடும்போது, வாயை மூடியபடி கதற வேண்டும். கொடூர விளையாட்டு அவர்களுக்கு அலுத்துப்போகும்போதோ, தாங்கவே முடியாத எல்லையை உடல் அடையும்போதோ வெளியே இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து நீங்கள் இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். உடலின் ரணமும், ரத்தம் கசிந்த உடைகளும் தெரியாத தொலைவில் நீதிபதி ஒருவரின் முன் கொண்டுசெல்லப்பட்டு நீங்கள் நிறுத்தப்படுகிறீர்கள். அந்த நீதிபதி உங்களைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். பின்னர் நீங்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறீர்கள். அங்கே உங்களுடைய மோசமான உடல்நிலையைப் பார்த்தும், காவல் அதிகாரிகளைச் சங்கடப்படுத்தாத வகையில் அவர்கள் விரும்பும் திருப்திகரமான ஒரு மருத்துவச் சான்றிதழை, அரசு மருத்துவர் வழங்குகிறார். பின்னர், சிறையில் நீங்களும் உங்கள் பிள்ளையும் உயிரை விடுகிறீர்கள்.

நாட்டு மக்கள் அதிர்கிறார்கள். எல்லோரும் பேசத் தொடங்கியதும், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல்வர் பேசுகிறார். இந்தக் கொடுங்கோன்மையை வன்முறை என்று சொல்லக்கூட தயங்கும் அவர், மகன் மூச்சுத்திணறலாலும், தந்தை உடல்நலக் குறைவாலும் இறந்ததாகச் சொல்கிறார். எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுக்கவும், குற்றஞ்சாட்டப்படும் காவல் துறையினரைப் பணியிடை நீக்கம் செய்யும் அவர், அதேசமயம் அவர்கள் மீது அதுவரை பதியப்படாத ஒரு வழக்கை, தன்னுடைய பொறுப்புக்குக் கீழேயுள்ள காவல் துறையிடமிருந்து தன்னுடைய பொறுப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றிய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றவிருப்பதாக அறிவிக்கிறார். இதனிடையே சம்பவத்தை விசாரிக்க நீதிபதி ஒருவர் செல்கிறார். விசாரணையில் ‘உங்களால் ஒன்றும் புடுங்கக்கூட முடியாது’ என்று நீதிபதிக்கு சவால் விடுகிறார் ஒரு காவலர். விசாரணைக்குக் காவல் துறையினர் ஒத்துழைக்க மறுப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் நிர்வாகத்தைக் காவல் துறையிடமிருந்து பறித்து, வருவாய்த் துறைக்கு மாற்றி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது நீதிமன்றம்.

அன்றாடம் காவல் கம்பிகளுக்குப் பின் ஐந்து பேர் உயிரை விடும் ஒரு நாட்டில் இந்த விவகாரம் எப்படி முடியும் என்ற கேள்விக்கு முன் சுற்றிலும் இங்கு நடக்கும் விவாதங்களிலிருந்து வேறு ஒரு அடிப்படையான கேள்விக்கு முகம் கொடுப்போம். இது வெறும் காவல் துறையின் சீர்கேடா அல்லது ஒட்டுமொத்த அமைப்பினுடைய சீர்கேட்டின் வெளிப்பாடா?

நம் கிராமங்களையும் நகரங்களையும் மறுவரையறுப்போம்!



அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

உலகின் பழமையான விவாதம் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறுகிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ் பாவ்லோ, மும்பை என்று மனித குலம் நம்பும் கனவு நகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்காகி இருப்பதும், நகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற ஆர்வத்தோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து விளிம்புக்கு, புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இத்தகு உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

பொதுவாக, நகரங்களை நவீனத்துடனும், கிராமங்களைப் புராதனத்துடனும் பொருத்திப் பார்க்கும் மனோபாவம் உலகம் முழுக்க நிலவுகிறது. உண்மை அப்படி இல்லை என்றாலும்கூட. அழிவில் புதையுண்டுபோன சிந்து சமவெளி, கீழடி தொடங்கி தம்மை மீட்டுருவாக்கியபடியே வந்திருக்கும் ஏதென்ஸ், ரோம், லண்டன் வரை நமக்குச் சொல்வது, நகரங்களின் புராதனத்தையும்தான். தீவிரமான விமர்சனங்களை நகரங்கள் மீது கொண்டிருந்தாலும் ஏன் மனித குலம் இடையறாது நகரங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது? ஏனென்றால், வாழ்க்கையை நேற்றைய புதுமையும்கூட மூடிடாத வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கும் பண்பை நகரங்கள் பெற்றிருக்கின்றன. அப்படியென்றால், கிராமங்கள் எப்படி நீடிக்கின்றன? அவை இன்றைய புதுமையையும் வாழ்க்கையின் நெடிய பழமையோடு இணைக்க முற்படுகின்றன. ஆக, மனித குலத்தின் புராதன புதுப்பிப்பு சக்தி நகரங்கள் என்றால், புராதனத்தைத் தக்கவைக்கும் சக்தி கிராமங்கள். இரண்டுக்கும் இடையிலான சமநிலை முக்கியம்.

ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?



இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.

சூப்பர் ஸ்டார் கல்கி




அவையோர் அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்நாட்டில் தீவிரமான வாசிப்பைக் கொண்ட, புதிதாக எழுத வரும் எவரும் தன்னுடைய பயணப் பாதையின் குறுக்கே கல்கியைச் சந்திக்காமல் இருக்கவே முடியாது. தமிழ்ப் பத்திரிகை உலகைப் பொறுத்தமட்டில், அவர்தான் முதல் சூப்பர் ஸ்டார்; எப்படி சினிமாக்காரர்களுக்கு எம்.கே.தியாகராஜ பாகவதரோ அப்படி. ஆகையால், என்னுடைய ஆதர்ஷங்களில் ஒருவராகவும் கல்கி நிலைப்பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் நேரடியாக கல்கியிடம் சென்றவன் இல்லை; ரொம்ப சின்ன வயதிலேயே அவர் மறைமுகமாக என்னை வந்தடைந்திருந்தார். ‘கல்கி குழுமம்’ கொண்டுவந்த ‘கோகுலம்’ என் சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்த இதழ்களில் ஒன்று. அங்கிருந்து அடுத்தகட்டம் நோக்கி  நகர்ந்தபோது ‘கல்கி’ இதழ் நான் புதிதாகப் படிக்க ஆரம்பித்த இதழ்களின் பட்டியலில் இருந்தது. அப்புறம் கல்கியின் எழுத்துக்கள். இப்படிப் படிப்படியாக கல்கியின் வாசகன் ஆகியிருந்தேன். பின்னாளில் அவரும் காந்தியர்; காவிரிப்படுகையைச் சேர்ந்தவர் என்று அறிந்தபோது சந்தோஷம் அதிகமானது. நானும் ஒரு பத்திரிகையாளனானபோது இதழியலில் என்னுடைய முன்னோடிகளில் அவரும் ஒருவராகிவிட்டார். கல்கியின் நினைவைப் போற்றும் நிகழ்வில் கலந்துகொள்வதையும், அவருடைய கட்டுரை நூல் வெளியீட்டில் பங்கேற்பதையும் பொருத்தமானதாகவே கருதுகிறேன்.

நான் கல்கியை ‘பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்’ என்று வர்ணித்ததில் ஆழமான  அர்த்தம் உண்டு. தமிழ்ப் பத்திரியுலகில் கல்கி கோலோச்சிய கால் நூற்றாண்டுதான் அதன் முதல் பொற்காலம். பலதுறை ஜாம்பவான் எஸ்.எஸ்.வாசனால் வாங்கப்பட்டு, ‘ஆனந்த விகடன்’ புத்தெழுச்சி பெறும் 1931-ல்தான்தான் அதன் விற்பனை 1200 பிரதிகளில் இருந்து 16000 ஆக உயர்ந்தது. வெளியில் இருந்து அதுவரை எழுதிவந்த கல்கி, அதன் பொறுப்பாசிரியராக இணைகிறார். அடுத்து, எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து அங்கு கல்கி  பணியாற்றிய 11 ஆண்டுகள்; தொடர்ந்து 1941 முதல் சதாசிவத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய ‘கல்கி’யில் அவர் மறையும் 1954 வரை பணியாற்றிய 14 ஆண்டுகள்... ஆக இந்தக் கால் நூற்றாண்டு தமிழ் இதழியலும் அதன் வாசகப் பரப்பிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய முக்கியமான காலகட்டங்களில் ஒன்று.

நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக் கூடாதா?



இந்தியாவுக்கு வெளியே இப்போது அதிகம் அமெரிக்காவைக் கவனிக்கிறேன். குவிமையம் நியூயார்க். கரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாடு அமெரிக்கா என்றால், அமெரிக்காவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாநிலம் நியூயார்க்; அதிகம் பாதிப்புக்குள்ளான நகரம் நியூயார்க் நகரம். கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையிலுள்ள நாடான ரஷ்யாவைக் காட்டிலும் நியூயார்க்கின் எண்ணிக்கை அதிகம்.

நியூயார்க் என்ற சொல்லே வானளாவிய கனவுகளோடு பொருந்தியது. எத்தனை நள்ளிரவுக்குப் பின் ஒருவர் தூங்கச் செல்லும்போதும், அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலைக்கு வெளியே பிரகாச ஒளியில் நியூயார்க் நகரம் மிதந்துகொண்டிருக்கிறது. நியூயார்க் தூங்குவதே இல்லை. மேகத்தைக் கிழித்துக்கொண்டு வானத்தை முட்டிப்பார்க்க உயர்ந்துகொண்டேயிருக்கும் நியூயார்க்கின் கட்டிடங்கள் மனித குலத்தின் இடையறாத சாத்தியங்களைப் பிரகடனப்படுத்தியபடியே வளர்கின்றன. அமெரிக்காவின் முதல் தலைநகரமாக இருந்தது அதுதான்; வாஷிங்டன் பின்னாளில் அந்த இடத்தைப் பறித்துக்கொண்டாலும் இன்றைக்கும் நியூயார்க்கின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை.

அமெரிக்காவின் நிதித் தலைநகரம் நியூயார்க். இன்றைக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பதினைந்து நகரங்களில் வசிக்கின்றனர். அவர்களில் அதிகம் பேர் நியூயார்க்கிலேயே வசிக்கிறார்கள். உலகிலேயே அதிகமான தங்கத்தை இருப்பில்  வைத்திருக்கும் நகரம் அது. உலகின் புகழ்பெற்ற நகர அடையாளச் சின்னமான லண்டன் டவர் பாலத்தைவிட நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் பழமையானது என்று தன் நகரத்தை ஒரு நியூயார்க்கியர் அறிமுகப்படுத்தும்போது, அதில் வேறொரு சூசகச் செய்தி உள்ளடங்கியிருக்கிறது. இந்தப் பூமியிலேயே மேம்பட்ட வசதிகளையும், பாதுகாப்பான சூழலையும் தங்கள் நகரில் உருவாக்கியிருப்பதாகவும் அது ஒரு ஒரு நவீன தொன்மம் என்றும் நியூயார்க்கியர்கள் நீண்ட காலமாக நம்பிவருகிறார்கள். அந்த நியூயார்க் கரோனாவின் முன் உறைந்திருக்கிறது. நிரம்பி வழியும் நியூயார்க்கின் மருத்துவமனைகள் புதிய நோயாளிகள் எனும் செய்தி கேட்டாலே மலைக்கின்றன. பெரிய பெரிய சவக்குழிகளுக்குள் உயிரிழப்போர் சடலங்களின் சவப்பெட்டிகள் அப்படியே தொகுப்பாக மண்ணுக்குள் இறங்குகின்றன.

நான் கரோனாவை அறிவியல்ரீதியாகப் புரிந்துகொள்வதற்கு இணையாக மானுடரீதியாக உணர்ந்துகொள்வதற்கும் முயற்சிக்கிறேன். அமெரிக்கா மீதான, நியூயார்க் மீதான கரோனாவின் அடி ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அகங்காரம் மற்றும் பேராசை மீதான அடியாகவும் எனக்குத் தோன்றுகிறது. தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா இன்று பல நாடுகளின் கனவு; நியூயார்க் பல நகரங்களின் கனவு. நாமும் அப்படியாகத்தான் ஆசைப்படுகிறோம். கடவுள் எச்சரிப்பதுபோலத் தோன்றுகிறது. கரோனாவைக் கிருமியாகப் புரிந்துகொள்வதோடு மனிதகுலம் அதை இப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ள முற்பட்டால், எதிர்காலத்தில் நமக்குக் கூடுதலான பலன்கள் கிட்டும் என்று தோன்றுகிறது.

எனக்கு நியூயார்க்கை வேறு சில விஷயங்களுக்காகப் பிடிக்கும். பன்மைத்துவம் - ஜனநாயகம். உலகிலேயே அதிகமான மொழிகளைப் பேசுவோரைக் கொண்ட நகரம் அது; கிட்டத்தட்ட சரிபாதி வீடுகளில் ஆங்கிலம் அல்லாத மொழியே தாய்மொழி. தனிநபர் சுதந்திரத்தை அது தூக்கிப் பிடிக்கிறது. பெண்கள் எந்த இடத்துக்கும் எந்த உடையிலும் செல்லும் உரிமையைச் சட்டபூர்வமாகவே பாதுகாக்கும் நகரம் அது; மேலாடை இல்லாமலும்கூட நியூயார்க்கில் ஒருவர் பொது இடத்துக்கு வர முடியும். உலகிலேயே அதிகாரம் மிக்க அதிபரைக் கொண்ட நாடு என்றாலும், கூட்டாட்சிக்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவத்தை எப்போதுமே நியூயார்க் உயிர்த்துடிப்போடு பாதுகாத்திருக்கிறது; இந்த கரோனா காலத்தில் ஜனநாயகத்தின் இயக்கமும் கூட்டாட்சியின் உத்வேக ஆற்றலும் அங்கு மேலும் கூடியிருக்கின்றன.

பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு



அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? உலகம் முழுக்க இன்று உள்ளூர் அரசியலுணர்வு எழுச்சியடைகிறது. ஒரு திடீர் நெருக்கடி நம்முடைய சகல கற்பிதங்கள், போதாமைகளையும் அம்மணமாக்கி நிஜமான தேவைகளைச் சுட்டுகிறது. உலகெங்கிலும் மாநில அரசுகளாலும் உள்ளூர் அரசுகளாலும் வெகுமக்களாலும் தேசிய அரசுகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது உலக நாடுகளின் எல்லைகளில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குமோ தெரியாது; ஆனால், நிஜமான சுதந்திரம், நிஜமான இறையாண்மை எதில் உள்ளடங்கியிருக்கிறது என்று மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது; நிதியாள்கைதான் அது!

கண்ணியத்துக்கான மாற்றீடல்ல பிழைப்பு

அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு ரயில் பாதை. அதன் நடுவே ரத்தம் தோய சிதறிக் கிடக்கும் சப்பாத்திகள். பக்கத்திலேயே சிதைந்த உடல்களின் பாகங்கள். இந்த ஒரு காட்சி கரோனா வரலாற்றிலிருந்து அகலப்போவதே இல்லை. எத்தனை நூற்றாண்டுகள் கழித்தாலும், எதிர்வரும் தலைமுறைகள் நினைவுகூர்கையில் கரோனாவை இந்தியா எதிர்கொண்ட ஒட்டுமொத்த சூழலையும் ஓர் உருவகமாக அந்தக் காட்சி சொல்லும். ஊரடங்கின் விளைவாகப் பிழைப்பை இழந்து, போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், சொந்த மாநிலத்துக்கு ரயில் பாதை வழியே கால்நடையாகச் செல்லத் துணிந்து, ஔரங்காபாத் அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பதினாறு பேரும் அந்தக் கொடிய அதிகாலையில் எழுப்பிய மரண ஓலம் இந்த நாட்டின் மனசாட்சி நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பெரும் அறைகூவல்.

இந்தியாவின் அமைப்பில் உள்ள சகல பலவீனங்களையும் கரோனா அம்பலமாக்குகிறது. வணிகத் தலைநகரம் - முன்னேற்றத்தின் முகம் என்று நாம் கொண்டாடிவந்த மும்பைதான் இன்று நாட்டிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நகரம். நாட்டுக்கே பொருளாதார வளர்ச்சிக்கு முன்மாதிரி என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட குஜராத், கரோனா மரணங்களில் முன்வரிசையில் இருக்கிறது. ஆலைகளுக்கும் தொழில்களுக்கும் பேர்போன குஜராத்தி நகரங்களால் தம் தொழிலாளர்களை சில வாரங்களுக்குக்கூட நிம்மதியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. குஜராத்தின் சண்டோலாவிலுள்ள ஆலை ஒன்றில் கூலியாக வேலை பார்த்துவந்த ஜாதவ் அசாமின் கதாரியா கிராமத்துக்குப் புறப்பட்டார்; 25 நாட்கள் நடந்தும், இடையிடையே தென்பட்ட வண்டிகளில் தொற்றியபடியும் 2,800 கி.மீ. பயணித்து, தன் சொந்த ஊரை அவர் அடைந்தபோது ஜாதவின் உடல் நைந்துபோயிருந்தது. ‘எங்களை விடுங்கள்; ஜாதவ் மாதிரியேனும் ஊர் போய் சேர்கிறோம்’ என்று சூரத்திலுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபடியே இருக்கின்றனர்.

கொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி


நம் மக்களின் வழக்காறுகளில் கொள்ளைநோய்கள் என்னவாகப் பதிவாகியிருக்கின்றன? கரோனா காலத்திய உலகளாவிய போக்குகளைக் கடந்த காலத்தின் வழி புரிந்துகொள்ள முடியுமா? சமூக ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியனுடன் பேசினேன். பேராசிரியர் இப்போது மதுரையில் இருக்கிறார். நள்ளிரவிலும் தூங்காத நகரம் இப்போது நண்பகலிலும் கொஞ்சம் அயர்ந்திருக்கிறது.

மதுரை என்றதுமே சிலப்பதிகாரம் நினைவுக்கு வந்துவிடுகிறது, சங்க காலம் நினைவுக்கு வந்துவிடுகிறது, திருவிழாக்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. தொன்மையான மதுரை நகரம், தமிழர்களின் நினைவுகளில் இடையறாது ஒளிர்ந்துகொண்டிருக்கும் நகரம். வீட்டுக்குள் இருக்கும் உங்கள் நினைவுகளில் ஊரடங்கிய மதுரை எப்படியாகக் காட்சியளிக்கிறது?
ஒளி மங்கியதாகத் தோன்றுகிறது. அந்த ஒளி வேறு எதுவும் இல்லை, மக்களுடைய இடையறாத இயக்கம்தான் அது. வரலாற்றில் பல அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட நகரம்தான் இது. மக்களை ஒடுக்கிய ஆட்சியாளர்களின் அன்றைய அடக்குமுறைகள் எப்படி இருந்திருக்கும்? இந்த ஊரடங்கு அதைக் காட்டுவதுபோல இருக்கிறது.

கரோனா கிருமியின் பரவலை ஏற்க நாம் தயாராக வேண்டும்: மருத்துவர் - அரசியலர் செந்தில் பேட்டி


அடிப்படையில் மருத்துவரும், தற்செயல் அரசியலருமான இரா.செந்தில், வெகுமக்களிடையே எப்போதும் புழக்கத்தில் இருப்பவர். தீவிரமான வாசகர், சமூகச் செயல்பாட்டாளர், பாமகவின் தாராளர்களில் ஒருவர், தருமபுரி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனா கிருமியின் தாக்கம் சுகாதாரப் பிரச்சினையாக மட்டுமல்லாது, சமூக, பொருளாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில், கிருமியிடமிருந்து தப்பிக்கும் உத்திக்கு மாற்றாகக் கிருமியை எதிர்கொள்ளும் உத்திக்கு மாற வேண்டும் என்று பேசுபவர் செந்தில். இந்தியா முந்தைய உத்தியிலேயே தொடர்ந்து சென்றால், பசியில் பல கோடி மக்களை நாம் தள்ளிவிடுவோம் என்பதால், பிந்தைய உத்தியையும் பரிசீலிப்பது மிகுந்த அவசியம் ஆகிறது.

கரோனாவுடனான இன்றைய சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கரோனா தொடர்பிலான உலகின் ஒவ்வொரு செய்தியையும் நான் வாசிக்கிறேன். தொடக்கத்தில் கிருமியிடமிருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்பட்ட வழிமுறைகளையே ஒரு மருத்துவராக நானும் தீவிரமாக நம்பினேன், பின்பற்றினேன். இது நாட்களில் அல்லது வாரங்களில் முடியும் பிரச்சினை இல்லை என்பதை நாளடைவில் புரிந்துகொண்டுவிட்ட நிலையில், நாம் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று யோசிக்கலானேன். ஏனென்றால், நான் மருத்துவத்தில் மட்டும் அல்ல; அரசியலிலும் இருக்கிறேன்; அன்றாடம் சாமானிய மக்கள் சந்திக்கும் அவலங்களைப் பார்க்கிறேன், பலர் சொல்லக் கேட்கிறேன். இது நீங்கலாக உலகின் பல்வேறு நாடுகளும் இதை எப்படி அணுகுகின்றன என்றும் பார்க்கிறேன். மொத்த உலகமும் கரோனாவுடன் வாழப் பழகி அதை எதிர்கொண்டு கடப்பது எனும் உத்தி நோக்கியே நகர வேண்டும்.  ஏனென்றால், வேறு வழி நமக்கு இல்லை.

இந்தியாவுக்குத் தேவை அதிகாரப்பரவலாக்கல் சிகிச்சை



அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு பேரிடரை எதிர்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய படிப்பினை, ‘உண்மையில் நாம் யாராக, என்னவாக இருக்கிறோம்?’ என்பதை நாமே புரிந்துகொள்வதுதான். நம்முடைய எல்லா பலங்கள், பலவீனங்களையும் ஒரு பேரிடர் அம்பலமாக்கிவிடுகிறது. கரோனா கிருமிக்காக ஒட்டுமொத்த நாடும் போராடிவரும் இந்நாட்களில், சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான ஒரு கிருமி நம் கவனத்தைக் கோருகிறது - அதிகாரக்குவிப்பு; இனியேனும் அதற்கு எதிரான சிகிச்சையை நாம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.

உலகம் முழுக்க கரோனா பரவியிருப்பதாலேயே உலகத்தின் ஒவ்வொரு நாடும் அதை எப்படி எதிர்கொள்கின்றன என்கிற அணுகுமுறை வேறுபாட்டைக்  காணும் அசாதாரணமான சந்தர்ப்பம் இன்று நமக்கு வாய்த்திருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை ஒரு உத்தியாகக் கையில் எடுத்தன. ஆயினும், ஒவ்வொரு நாட்டிலும் ஊரடங்கும்கூட அந்தந்த நாட்டின் இயல்புக்கேற்ற பண்பையே வெளிப்படுத்துகிறது. சீனா மிகக் கடுமையான கண்காணிப்பு வளையத்தைத் தன் நாட்டு ஊரடங்குக்கு அணிவித்தது; முற்றிலுமாக மக்களின் எல்லா வெளிச் செயல்பாடுகளையும் முடக்கியது. மக்கள் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்லிவிட்டு அவர்களுடைய பெரும்பாலான செயல்பாடுகளை அனுமதித்தது ஸ்வீடன். நாம் எதையெல்லாம் அத்தியாவசியமாகக் கருதுகிறோம்? நாட்டுக்கு நாடு இதுவும் வேறுபட்டது. இத்தாலியில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் பட்டியலில் புத்தகக் கடைகளும் இருந்தன; இத்தாலியர்களுக்குப் புத்தகங்களும் அத்தியாவசியம். அமெரிக்காவில், ‘ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்’ என்று இந்த ஊரடங்குக் காலத்திலும் போராட்டம் நடத்த முடிகிறது. அமெரிக்கர்களுக்குப் போராட்ட உரிமையும் அத்தியாவசியம். நாம் நிறைய உள்நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஊரடங்கு: என்ன பேச வேண்டும் என் பிரதமர் ?



அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் உலகத்தை ஒட்டி நாமும் வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம். ஊரடங்குக்குப் பிந்தைய இந்த ஒரு மாதம் நமக்குப் பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. கிருமி எப்படியெல்லாம் பரவுகிறது, அறிகுறிகள் என்னவாகவெல்லாம் விரிவடைகின்றன, தொற்று எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது; இவை எல்லாமே ஒவ்வொரு நாளும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன அல்லது நாளாக நாளாகத்தான் நாம் இந்தக் கிருமியையும் அதன் மொத்த விளைவுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சீனா இந்தக் கிருமியை முதலில் எதிர்கொண்டது; ஆகையால், அடுத்ததாக ஐரோப்பா, அமெரிக்கா, தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகள் என்று எல்லோருமே  மூடுண்ட சீன அணுகுமுறையையே பின்பற்றலானோம்; முழு ஊரடங்குக்கு மாறினோம். சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இதைக் கடந்துவிடலாம் என்று எண்ணினோம். வெளிநாடுகளிலிருந்து கிருமித் தொற்றோடு வந்திருப்பவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதன் வாயிலாகவும், அவர்கள் வழி தொற்றுக்குள்ளாவோரைத் தடுப்பதன் வாயிலாகவும் கிருமியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பினோம். இது நம் கணக்குகளில் அடங்கிவிடும் விவகாரம் அல்ல என்பதையே மாறிவரும் சூழல் உணர்த்துகிறது. சில மாதங்கள் அல்ல; இந்தக் கிருமியிடமிருந்து முழுமையாக விடுபட சில ஆண்டுகள்கூட ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படியென்றால், என்ன செய்வது? ஆண்டுக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே இருப்பதா?

நாம் வியூகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. அதாவது, கிருமியிடமிருந்து வெற்றிகரமாகத் தப்பித்துக்கொள்வது எப்படி என்கிற வியூகத்திலிருந்து கிருமியை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்கிற வியூகத்துக்கு நாம் மாற வேண்டும். கிருமி நம்மைத் தொற்றினால், நம் குடும்பத்தினரைத் தொற்றினால் எப்படி அதை எதிர்கொண்டு கடந்து வருவது என்ற முன்னேற்பாட்டினூடாக புதியதோர் இயல்பு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்: கி.ரா. பேட்டி

படம்: புதுவை இளவேனில்

நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியும் நூற்றாண்டை நெருங்குபவருமான கி.ராஜநாராயணன் இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி இருக்கிறார்? எத்தனையெத்தனை நோய்களையும் மக்களின் வருத்தப்பாடுகளையும் பார்த்தவர் அவர்! இந்த ஊரடங்கு காலத்தை அவர் எப்படிப் பார்க்கிறார்? நம்முடைய மூதாதையோரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள இன்றைக்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா? புதுச்சேரியில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பவருடன் பேசினேன்.

அடுத்த 3 மாதங்களுக்கு என்ன திட்டம்?


ஒரு சின்ன குடிசை. மூதாட்டியும் பெரியவரும் அதில் வசிக்கிறார்கள்.  பெரியவர் நல்ல நாட்களிலேயே வீட்டில் முடங்கிக் கிடப்பவர். மூதாட்டி வீடுகளுக்கு வேலைக்குச் செல்பவர். வெளிவேலை, உள்வேலை எல்லாமே அவர்தான். கரோனா செய்திகள் மெல்ல அந்த வீட்டின் அன்றாடங்களை மாற்றுகின்றன. வீட்டு வாசலில் சாணி தெளிப்பதற்கு மாறாக, தினமும் மஞ்சளும் உப்பும் கலந்த தண்ணீரை மூதாட்டி தெளிக்கிறார்; ஒருசில நாட்கள் வீட்டிலேயே வேப்பிலைக் கரைசலைத் தெளிக்கிறார். வீட்டு வாசலிலேயே ஒரு சோப்பு - ஒரு வாளித் தண்ணீர். வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். கை, கால் கழுவாமல் வீட்டினுள் நுழைவதில்லை.

பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தபோது, பக்கத்தில் கடன் வாங்கி மூன்று மாதத்துக்கான அரிசியையும், கொஞ்சம் மளிகைச் சாமான்கள் – காய்கறிகளையும் வாங்கி வந்தார். முதலில் வடகம் உருட்டினார். அடுத்தடுத்த நாட்களில் வடகத்தோடு கத்திரி, மா, சுண்டைக்காய் என்று பல காய்களும் வற்றல்களாகச் சின்னச் சின்னத் தட்டுகளில் வெயிலில் காய்ந்தன. அன்றைக்குக் காய்கள் வீட்டுக்கு வெளியிலேயே கழுவப்பட்டு, வெயிலில் ஒரு சூடு கண்ட பின் வீட்டுக்குள் கொண்டுசெல்லப்படுகின்றன. “நாம பழைய நெலமைக்குத் திரும்ப குறைச்சலா மூணு மாசமாகும்போல இருக்கே? வெளிநடமாட்டம் இல்லாதப்ப உடம்பைப் பெருக்கவுட்டு பிரச்சினையத் தேடிக்கக் கூடாதுன்னு அய்யாவும் நானும் சாப்பாட்டை ரெண்டு வேளையாக்கிட்டோம். வாரத்துக்கு ஒருக்க நான் சந்தைக்குப் போறதோட சரி. இனி அதுக்கும் கையில காசு இல்லை. கிடைக்கிற காய்ல கொஞ்சத்தைச் சமைச்சுட்டு, மிச்சத்தை வத்தலுக்குப் போடுறது. தண்ணிச் சோறு திங்கவும் தொட்டுக்கை வேணும்ல? பாவம் குடியான ஜனம். இப்பவும் நமக்காகக் காய்கறியத் தூக்கிக்கிட்டு ஓடி வருதுவோ. நாளைக்கு வியாதி மிகுந்தா பயம் யாரை வெளிய நடமாடவுடும்? சம்சாரிங்க யோசிச்சுதான் நடந்துக்கணும்! நீகூட ஒன்னைப் பத்தா வகுத்துச் செலவழிக்கப் பழகிக்கய்யா!”

இதை ஒரு மூதாட்டியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சொல்வதா அல்லது ஒரு சமூகத்தினுடைய வரலாற்றறிவின் காலத்திய வெளிப்பாடு என்று சொல்வதா? கடன் வாங்கி அரிசியை முன்கூட்டி வாங்குபவளும் அவள்தான்; அரிசியைச் சிக்கனமாகச் செலவழிப்பவளும் அவள்தான். நெருக்கடியான சூழல்களில் துரிதமாக முடிவெடுப்பது மட்டுமல்ல; காலத்தே செயல்படுவதும் முக்கியம். அப்படிச் செயல்பட எங்கோ உண்மைக்கு முகம் கொடுத்து, பொறுப்பெடுத்துக்கொள்வது முக்கியம். உங்கள் சிந்தனையை யாரும் ஆக்கிரமிக்காமல் இருப்பது முக்கியம். இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இந்திய அரசிடம் நான் காணும் பெரும் சிக்கல், அது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சிந்தனையையும் ஆக்கிரமிக்க முற்படுகிறது; ஆனால், அதன் சிந்தனை என்ன, அதன் கையில் உள்ள முன்கூட்டிய திட்டங்கள் என்ன என்பது இன்றுவரை நம் யாருக்கும் தெரியவில்லை. ஊரடங்குக்கு முந்தின நாள் வரை நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்திக்கொண்டே ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றக் காட்சிகளையும் அரங்கேற்றிக்கொண்டிருந்ததுதான் அது!


கரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா?



இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன என்ற க்வோ ஜிங்கின் நாட்குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தேன். வூஹான்வாசியான ஜிங் ஓர் இளம்பெண்; சமூகச் செயல்பாட்டாளர். ஜனவரியில் வூஹான் முடக்கப்பட்ட முதல் வார அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

முடக்கப்பட்ட அன்றாடம்

அன்று காலை ஜிங் எழுந்தபோது நகரம் முற்றாக முடக்கப்பட்ட செய்தி அவரை வந்தடைகிறது. இந்தச் செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது என்று அவருக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அப்படி ஒரு முன்னனுபவம் எல்லா வூஹான்வாசிகளையும்போல அவருக்கும் இல்லை. அதற்கு எப்படித் தயாராக வேண்டும், எவ்வளவு நாட்கள் நீடிக்கும்... எதுவும் தெரியவில்லை.

உடனடியாக வெளியே செல்கிறார். கடைகள் கூட்டத்தால் சூழப்பட்டிருக்கின்றன. அரிசி, நூடுல்ஸ், ரொட்டி, காய்கறிகள் என்று உணவுப் பொருட்கள் விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு மனிதர் ஏராளமான அளவில் உப்பு வாங்கிக்கொண்டிருக்கிறார். ‘ஏன் இவ்வளவு வாங்குகிறீர்கள்?’ என்று அவரிடம் இன்னொருவர் கேட்பதற்கு, ‘ஓராண்டுக்கு இதே நிலை நீடித்தால் என்ன செய்வது?’ என்கிறார். ஜிங் அதிர்ந்துபோகிறார்.

ஜிங்குக்கு எப்படியும் அவருக்குத் தேவையானவை கிடைத்துவிடுகின்றன. சீக்கிரமே நகரம் முடங்கிவிடுகிறது. குறிப்பிட்ட நேரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கான இடங்கள், கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வருகிறார்கள். பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கின்றன; திரையரங்குகள், மைதானங்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. விழாக்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் எதுவும் இல்லை. மனிதர்களுக்குள்ளான எல்லா உரையாடல்களும் சுருங்கிவிடுகின்றன. சிந்தனை முழுமையையும் கிருமி  ஆக்கிரமித்திருக்கிறது. ஜிங் தனிமையில் உழல்கிறார். சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. இடையிலேயே சீனப் புத்தாண்டு வருகிறது. அதுவும் பெரும் அச்சத்தினூடாகவும் அமைதியினூடாகவுமே கரைகிறது. ‘இந்த அமைதி என்னை அச்சுறுத்துகிறது; அருகிலுள்ள வீடுகளிலிருந்து ஏதாவது சத்தம் வரும்போதுதான் எனது அருகில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதையே உணர முடிகிறது’ என்று எழுதுகிறார் ஜிங்.

ஒரு நாள் காலாற வெளியே நடக்கும் எண்ணம் ஜிங்குக்கு வருகிறது. சாலையில் நடக்கிறார். பரபரப்பான அந்த நகரின் சாலைகள் இப்போது வெறிச்சோடி அங்கொருவர், இங்கொருவரோடு காட்சி அளிக்கிறது; பேருந்துகளில் ஆறேழு பேர் உட்கார்ந்து செல்கிறார்கள். ஜிங் கண்கள் கலங்குகின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும்?

மோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை?


மூன்று பொம்மைகள். இந்தப் பக்கம் மோடி பொம்மை. அந்தப் பக்கம் சோனியா பொம்மை. இரண்டும் உதட்டைப் பிதுக்கி, தலையை உதறுகின்றன. நடுவேயுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் பொம்மை வெற்றிக் களிப்புடன் ஆட்டம் போடுகிறது. தொலைக்காட்சிகளில் தேர்தல் முடிவு அறிவிப்புகளோடு இப்படியான குட்டி கேளிக்கைகளும் சேர்ந்துகொள்வது குதூகலமாகத்தான் இருக்கிறது. அதுசரி, நாடு தழுவிய மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும்போது, நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைக் கையில் வைத்திருக்கும் தலைவர் பொம்மைகள் யுத்தத்தில் மோதினால் அதில் ஒரு நியாயம் உண்டு; டெல்லி போன்ற நாட்டின் ஒன்றரை சதவீத மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சின்ன மாநிலத்தின் தேர்தலுக்கும் ஏன் இந்தியாவின் தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த தேசியத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஈடான ஒரு முகம் இன்று பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிலுமே வற்றிப்போனது தற்செயல் அல்ல; பிராந்தியங்களில் சுயாதீனமான தலைவர்களை இன்று இரு தேசியக் கட்சிகளுமே விரும்பவில்லை. தேர்தல்களில் எதிர் வரிசையிலும் அப்படியான தலைவர்கள் இல்லாத நிலையில், தேசியக் கட்சிகளின் கணக்குகள் செல்லுபடியாகின்றன; எதிரே வலுவான பிராந்தியத் தலைவர்களின் கட்சிகள் நிற்கும்போது தேசியக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. எப்படியும் முழு அதிகாரமும் தம் கைகளிலேயே இருக்க வேண்டும் என்ற தேசியத் தலைவர்களின் அதிகார வேட்கையைப் பிராந்தியங்கள் தொடர்ந்து நிராகரிக்கின்றன.

தொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி மக்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பெரும் வெற்றியைப் பரிசளித்திருப்பதானது, ஒரு புதிய செய்தியை இந்திய அரசியல் பரப்பின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது:  தாம் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை இந்திய நகரங்கள் இன்று இந்நாட்டின் தேசியக் கட்சிகளுக்குச் சொல்கின்றன; தம்மைத் தாமே ஆண்டுகொள்வதற்கு அவை தயாராகிவிட்டதைச் சுட்டுகின்றன; கூடவே, இதுநாள் வரை நம் அரசமைப்பானது மாநிலங்களுக்கும், உள்ளாட்சிகளுக்கும் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் போதாமையையும், கூடுதல் அதிகாரத்தின் மீதான தேட்டத்தையும் அவை பிரகடனப்படுத்துகின்றன.